PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Friday, January 27, 2006

மன உளைச்சல்

ஜெயமே ஜெயம் - 12
"பில்கேட்ஸ் முதல் பில்கட்டமுடியாத கேஸ் வரை" அனைவருக்கும் பொதுவானது இந்த மனவுளைச்சல். இதை மன அழுத்தம்(அ)மன இறுக்கம்(Stress) என்றும் நாம் சொல்கிறோம். மன உளைச்சல் இல்லாதவன் இருக்கவே முடியாது. மனஉளைச்சலை நீக்க முடியாது .ஆனால், அதை சரிவர நிர்வகிக்க முடியும் . அதனை நிர்வகிக்கும் திறனைப் பொறுத்து நாம் மாறுபடுகிறோம். ஆகவேதான், Stress Management என்று சொல்கிறோம்.

அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், உறவுமுறைப் பிரச்சனைகள், எதிர்மறையான எண்ணங்கள், குற்ற உணர்வு, சுயமரியாதையின்மை, அளவுக்கு அதிகமான உழைப்பு, பணிச்சுமை, உடல் நலக்குறைவு போன்றவைகள் மன அழுத்ததை அதிகப்படுத்துகின்றன.

நோயும் மனவுளைச்சலும் தாயும் சேயும் போன்றது. ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டது.

"ச்சே.. இன்னைக்கு தலை ரொம்ப பாரமா இருக்குது" ,"எனக்கு மூடே சரியில்லை" என்ற வார்த்தைகள் நமது மனவுளைச்சலின் வெளிப்பாடுதான். நற நற என் பற்களைக்கடிப்பதும், நகத்தை கடித்து துப்புவதும் பின் 'அய்யோ' என விரலில் கடிபட்டு அலறுவதும் மனவுளைச்சலால்தான்.

Image hosting by Photobucket
மனவுளைச்சலால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டால்

1. இரத்தக் கொதிப்பு
2.இதயக் கோளாறு
3.தோல் சம்பந்தமான நோய்கள்
4.தலைவலி
5.உடல் குடைச்சல்
6.அஜீரணம்,வயிற்றுப்போக்கு
7.நரம்புத் தளர்ச்சி
8.அலர்ஜி
9.ஆஸ்துமா
10. மாதவிடாய் பிரச்சனைகள்
11.தூக்கமின்மை
12. மலச்சிக்கல்

என்று மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களின் பட்டியலைப் பார்க்கும் போது..இதை நிர்வகிக்கும் திறனை நாம் பெறாவிட்டால் இந்த நோய்கள் நம்மை நிர்வகித்துவிடும் என்பதை அதிர்ச்சியுடன் அறியமுடிகிறது.

சரி, விசயத்திற்கு வருகிறேன்.

'மனவுளைச்சலுக்கான மூல காரணகர்த்தா யார்?'என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கு காரணம், சாட்சாத் நாமேதான்.

மனக்கவலைதான் மனவுளைச்சலின் ஆதாரம்.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது போல் நாமேதான் காரணம் ஆகிறோம்.

அதாவது நாம் எப்போது தோல்வியடைந்ததாய் (அ) அவமானப்படுத்தப் பட்டதாய் (அ) Ego பாதிப்பினை அடைகிறோமோ ..அப்போதே மனவுளைச்சல் மகராஜா நம் மகுடம்மீது ஏறிக்கொள்கிறார்.

ஒரு இந்திய சன்னியாசியை வெள்ளையர்கள் கடுமையாகக் கேலி செய்தார்கள்..அவரோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை.. அவர்கள் மென்மேலும் கேலி செய்து இந்த சன்னியாசிக்கு கோபத்தை தூண்டவேண்டும் என்று முயன்றார்கள் . சன்னியாசி அசரவே இல்லை. பொறுமை இழந்த வெள்ளையர்கள் உமக்குச் சொரணையே கிடையாதா, உன்னை எவ்வளவு திட்டு திட்டினோம் உன்பாட்டுக்கு இருக்கிறாயே?" என்று கேட்டனர்.

அதற்கு சன்னியாசி தனது கையில் வைத்திருந்த பிச்சைப் பாத்திரத்தை எடுத்து 'இதை வாங்கிக்கொள்ளுங்கள்' என்றார்..

வெள்ளையர்கள் முடியாது என்றனர்.

சிரித்தபடியே சன்னியாசி சொல்லலானார்," நான் கொடுத்தப் பொருளை நீங்கள் வாங்காததினால் அது இன்னமும் என்னிடமே இருக்கிறது..அதுபோல் உங்களது வசவு சொற்களை நானும் வாங்கவில்லை" என்றாராம்.

இந்தக்கதை நாம் அறிந்த ஒன்றுதான்.

"நாம் அனுமதிக்காதவரை நம்மை யாரும் பைத்தியம் ஆக்கிவிடமுடியாது" எனவே, அடுத்தவரின் எதிர்மறை விமர்சனத்திற்காக வீழ்ந்து போகாதீர்கள்.

இதையும் மீறி நாம் மனவுளைச்சலுக்கு உள்ளானால் அருமையான தீர்வு உள்ளது அதுதான் தியானம்.

பிரார்த்தனை, தியானப்பயிற்சி, பிராணாயமா, உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைக்கின்றது. நமது மனதைச் சுத்தப்படுத்துகிறது. ஆனால் இதுவே அதிகமானால் அதுவே அழுத்தமாகி விடும். இது, அது, எது? என்று என்னைக் கேட்காதீர்கள்.

நம்மில் பெரும்பாலோர் பெரும்பான்மையான நேரம் அலுவலகத்தில்தான் இருக்கிறோம். பிரச்சனை அங்கே அதிகமாகத்தான் இருக்கும். சக ஊழியரிடம், மேலதிகாரியுடன், நமக்குக்கீழ் உள்ளவர்களுடன் என்று பட்டியல் நீளத்தான் செய்யும். அதற்காக நீங்கள் நொடிந்து நூலாக வேண்டாம். பிரச்சனையை நூடுல்ஸ் ஆக்கி ருசியுங்கள்.

அலுவலகப் பிரச்சனைகளை வீட்டிற்கோ, வீட்டுப் பிரச்சனைகளை அலுவலகத்திற்கோ சுமந்து கொண்டு செல்லாதீர்கள்.

இல்லையெனில் இரண்டு இடங்களிலுமே தொல்லைதான்.

மன உளைச்சலை நிர்வகிக்க மற்றொரு யுக்தி மனதை மற்றொரு பக்கம் திருப்புதல் என்பேன்.

சிலர் இருக்கிறார்கள் மனவுளைச்சலை போக்குகிறேன் பேர்வழி என்றபடி "நீலகிரி எக்ஸ்பிரஸ்சை" பக் பக் ..என்று வாய்வழியே விட்டுக்கொண்டு இருப்பார்கள்.. சிலரோ டாஸ்மாக்கில் மூழ்கி குளித்து பின்னர் அதுவே பெரும் உளைச்சலாய் ஆகிவிடும். இதெல்லாம் சீக்கிரமே எமராஜாவுக்கு அழைப்பு விடுக்கும் வழியே தவிர மனவுளைச்சலைத் தீர்க்காது.

இன்னொரு எளிமையான யுக்தி ஒன்றைச் சொல்கிறேன்..

பயிற்சி செய்துவிட்டு நீங்கள் அடைந்த பலனை எனக்கு கூறுங்கள்.

அந்தயுக்தி குழந்தைகளோடு விளையாடுங்கள் என்பதே!

(வலைப்பூ நண்பர் ஒருவர் தனது புத்தாண்டு தீர்மானத்தில் குழந்தைகளோடு விளையாடி அவர்களை ஜெயிக்கவிட வேண்டும் என்று எழுதியிருந்தார்.அவரை நான் பாராட்டியும் எழுதியிருந்தேன்)

சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். உங்கள் குழந்தையோடோ, அல்லது மற்ற குழந்தைகளோடோ ஒரு அரைமணி நேரம் விளையாடிப் பாருங்கள், ஒரு 5 வயது இளைத்து இருப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி பிறந்திருக்கும். உற்சாகமாய் இருப்பீர்கள்.

உங்களிடம் இருந்த மனக்கவலை எல்லாம் பறந்துபோய் இருக்கும்.இந்த முறையை எனது நண்பர்கள் பலர் பயிற்சி செய்து நல்ல பதில் சொல்லி உள்ளார்கள்.

சரி! விளையாட வாய்ப்பில்லையா, விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று வேடிக்கையாவது பாருங்கள்! அருமையாக இருக்கும்! இதற்கும் வாய்ப்பே இல்லையா குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியை ( Pogo Channel) பாருங்கள்.

நீங்கள் விற்பனை பிரதிநிதி ஆயின், சில நாட்களில் அதிகமான மனவுளைச்சலுக்கு உள்ளாகி இருப்பீர்கள். அந்த சமயம் நேரே வீட்டிற்கு சென்று ஒரு 10, 12 மணி நேரம் நன்றாக உறங்கி விழியுங்கள். புது ஆளாய் எழுந்திருப்பீர்கள். (இதையே செய்கிறேன் பேர்வழி என்று தினமும் நீங்கள் தூங்கினால் உங்க கதி பின்னர் அதோகதிதான்). நன்றாக் குளியுங்கள், பீச் , பார்க் என்று தனியே சென்று இயற்கையை ரசியுங்கள்.. இனிமையூட்டும் இசையை ரசியுங்கள், இல்லையெனில் உற்சாகமூட்டும் இசைக்கு நடனம் ஆடுங்கள்... ஆனந்தம் உங்களுக்கு உண்டாகும்.

மேற்சொன்ன முறைகளில் உங்கள் மன அழுத்தத்தினை நிர்வாகம் செய்யலாம்.. இன்னும் ஒரு யுக்தி இருக்கிறது அதுதான் "Relaxation Exercise Technique" இதை நான் பலருக்கு கற்று தந்துள்ளேன். உங்கள் பகுதியில் உள்ள திறமைவாய்ந்த சுயமுன்னேற்றப் பயிற்சியாளரிடம் இந்தப் பயிற்சி குறித்து கேட்டு கற்று கொள்ளுங்கள்.

அளவான சாப்பாடு, நிறைவான உறக்கம், நேர்மையான சிந்தனை, ஆரோக்கியமான சுவாசம் இவற்றை நாம் கொண்டு இருந்தால் நாம் மனவுளைச்சலை சாதுர்யமாக நிர்வகிக்க முடியும்.

மனவுளைச்சலை நிர்வகிப்போம் மகத்தான வாழ்வு வாழ்வோம்.

ஜெயம் வ(ள)ரும்...

1 Comments:

  • At 9:30 PM, Blogger NambikkaiRAMA said…

    "உண்மையான செல்வம் உடல்/மன நலனே"

     

Post a Comment

<< Home