PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Thursday, January 04, 2007

நீயே குருவாய்...



குரு வாழ்க! குருவே துணை!


நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

நாயிற் கடையோன் அடியேனை
தாயாய் அணைத்துக் காப்பாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

வாழ்வின் இலக்கணம் அறிகிலேன்- நான்
வந்ததின் காரணம் புரிகிலேன்!

பிழைக்கணும் என்றே பிறந்திட்டேன் - மீண்டும்
பிறவாது எனைக் காப்பாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

பொன் பொருள் புகழென்னும் போதையினால்- தினம்
மடிந்திடும் மக்கள் கூட்டத்திலே

நின்புகழ் அறியாமல் இருந்தேனே - நின்
தரிசனம் காணாத வரைக்குமப்பா!

கனவில் மட்டுமே காட்சி தரும்- நீ
கண்முன் காட்சித் தருவாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சேயாய் நான் இங்கு தவிக்கின்றேன்
தாயாய் அமுதூட்ட வாராயா?

இனம் மொழி பேதம் காணும் இவ்வுலகில்
இதம் எங்கே கிடைத்திடும் நானறியேன்

பொய்தனை மெய்யாக்கும் புளுகரோடு - உன்
புதல்வனாய் நான் வாழ்தல் கடினமப்பா!

அடியார் அன்பையே நாடுகின்றேன் - அதை
அடியேன் மகிழவே தினம் தருவாய்

பேரிடியாய் வானம் மேல் விழுந்தாலும் - உன்
பெயர் சொல்லிடவே வரம் தருவாய்!

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சகலமும் ஆனப் பரம்பொருளே
சக்தியே சித்தியே சரண் அடைந்தேன்!

மெய்த்தவம் பற்றிட வேண்டி நின்னேன்
ஐயனே எந்தன் ஐயம் நீக்கு!

நான் வந்ததின் காரணம் புரிய வேண்டும்
வாழ்வில் உன்மணம் நுகர வேண்டும்!

கண்ணால் உனை நான் காணவேண்டும்!
கடவுளே உனை நான் அடைய வேண்டும்!

என்னைப் படைத்தவனே எங்கு சென்றாய்
என்னுள்தான் இருக்கிறாயா எங்கு சென்றாய்?

என்ன செய்திட்டால் நீ வருவாய்,
எந்தன் ஏக்கத்தை நீயும் போக்கிடுவாய்?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சகலமும் ஆனப் பரம்பொருளே
சக்தியே சித்தியே சரண் அடைந்தேன்!

(ஸ்ரீஅனுமன் கோயிலில் 16/12/2006 சனிக்கிழமை அன்று அடியேனுக்கு உதித்தது ! )

"சென்னைக் காதல்" - விமர்சனம்

"என்னடா ராமா நீயுமா ?" என்று சிலர் கேட்பது எனக்கு கேட்கிறது.

ஆமாங்க! வேற என்ன பண்ணுறது! :(

என்னோட மைத்துனன் குமரியில் இருந்து சென்னைக்கு வந்து இருந்தான்..

இசை, படம் இவற்றில் அவனுக்கு மிகுந்த விருப்பம் உண்டு.

"அத்தான்! சென்னையில் ஏதாவது ஒரு நல்ல தியேட்டரில் படம் பார்க்கணும் அத்தான் " என்று சொல்லி ஞாயிறு மட்டுமே எனக்கு விடுப்பு என்பதை அறிந்து சனி அன்றே வந்திருந்தான்.


"நானும் சனிக்கிழமை இரவுக்காட்சிக்கு எடுக்கவா" என்றேன்.

"சரிங்க அத்தான் என்ன படம் ? லேட் ஆயிடுமே . வெயிலுக்கு எடுங்க அத்தான் " என்றான்.

"என்ன வெயிலுக்கா ? புரியலியே "

"வெயிலுக்கு எடுங்க அத்தான் "

ஓ! இரவுக் காட்சி வேண்டாமா! அப்ப மத்தியானம் காட்சி எடுக்கத்தான் வெயிலுக்குன்னு சொல்றீயா " என்று கேட்டேன்.

"அத்தான் "வெயில்" ங்கிறது படத்தோட பேரு .. " என்றானே பார்க்கலாம்.

ஒரே சிரிப்பு..

"இந்தா பாருப்பா இந்த சினிமா விசயத்தில் நான் ரொம்ப் வீக், எனக்கும் சினிமாவுக்கு வெகுதூரம் .."

"லிப்ட்" வச்சாக் கூட எட்டாது.. கடந்த 8 வருஷத்தில் 3 படம் பார்த்திருப்பேன்.. 4 வது படம் நாம இனி பார்க்கப் போற படம் ...சரி டிரை பண்ணுறேன்.. சத்யத்தில்தான் எடுக்கப் போறேன்.. அங்க அந்தப்படம் இல்லைன்னா வேற படம் எடுக்கலாம் " என்று சொன்னேன்.

அவன் ஆசைப்படுறானே என்று அலுவலக நண்பர் மூலமாக "சத்யம் காம்பள்க்ஸ்ஸில்" வேறு எந்த படத்திற்கும் கிடைக்காததால் "சென்னைக் காதல்" என்ற படத்திற்கு டிக்கெட் எடுத்திருந்தேன். காரணம் சூர்யவம்சம், புதுவசந்தம் என்று சூப்பர் ஹிட் தந்த குடும்ப பட இயக்குனர் விக்ரமன் எடுத்த படம் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.

சத்யம் சென்றோம்!

சத்யம் காம்பள்க்ஸ் சுத்தமாக வைத்திருந்தார்கள்.

நொறுக்கு தீனிகளை வாங்கிக் கொண்டு எங்கள் இருக்கையில் அமர்ந்தோம்..

படம் போட ஆரம்பித்தார்கள்.


" அய்யோடா சாமி! என் சினிமா டைரக்டரியில் இந்தப் படமுமா வர வேணும் ... விக்ரமனுக்கு அப்படி ஜனங்க மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை..."

படம் ஆரம்பித்தது முதல் அறுவை மேல் அறுவை!

படமே பார்க்கச் செல்லாத எனக்கு "இனியும் மவனே இந்தப் பக்கம் வருவீயா ? " என்று என் மனசாட்சி தண்டனை கொடுத்தது போல் இருந்தது.

பாவம் சினிமாவை நன்கு ரசித்து பார்க்கும் பழக்கம் உள்ள என் மைத்துனன் " இருக்கையில் சுருண்டு போய், தன் இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்தபடி.. நகைச்சுவை காட்சியிலும் (?????) சோகமாக இருந்தான்.. "

" அத்தான்" என்ற படி என்னை ஒரு பார்வை பார்த்தான் ..

எனக்கு அவனுடைய நிலையைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது..

என் நிலையே எனக்கு பரிதாபமாய் இருக்கையில் அவனுக்கு வேற நான் ஆறுதல் சொல்ல வேண்டி இருந்தது.

"அத்தான் ! வீட்டில் அனுக்குட்டி(என் மகள் அனுசூயா) கூட வெளையாடிக்கிட்டு இருந்திருக்கலாம் ..உங்கக்கிட்ட தெரியாத்தனமா படம் பார்க்கணும்னு சொல்லிட்டேன் " என்றான்..

பார்க்கவே ரொம்ப பரிதாபமாய் இருந்தான்..

"மன்னிச்சிடு சதீஷ் ! நானும் சோகமாக மூஞ்சை வைத்துக் கொண்டேன்.

" விவஸ்தை கெட்ட நகைச்சுவை, 7 பாட்டோடு ஒரு குத்துப் பாட்டு , லாஜிக்கே இல்லாத காட்சிகள், விஜய் டிவி கலக்கப்போவது யாரு சாம்பியங்களை வைத்துக் கொண்டு .. அவர்களுக்கும் சரியான வாய்ப்பை கொடுக்காத காட்சிகள்.. என்று சென்று கொண்டு இருந்தது.."

இப்பவாவது படத்தில் புதிய திருப்பம் வராதா ? இப்பவாவது படத்தில் புதிய திருப்பம் வராதா ? என்று ஏங்கிக் கொண்டு இருந்தேன்.

" எங்களுக்கும்தான் இப்படியா இல்லை மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் " என்ற படி அக்கம் பக்கம் இருப்பவர்களை நோட்டம் விட்டேன்..

நிறைய பேர் தங்கள் இருக்கையை காலி செய்து இருந்தனர்..

நொறுக்குத் தீனி விற்பனை மட்டும் அமோகமாய் நடப்பதைக் காண முடிந்தது.

படம் நிறைவுற்றது..

இந்த படத்தில் விக்ரமன் அப்படி என்னக் கருத்து சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் யோசித்தேன்.

படம் "குப்பை" படம்..

சென்னைக் காதல் இந்த மாதிரி குப்பையாய் இருக்கும்னு சொல்ல வாராருன்னு என்று நினைக்கிறேன்.


படம் முடிந்த்தும் அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ரொம்ப உற்சாகம்..

கொஞ்சம் சத்தமிட்டு சொன்னேன் " அடுத்தப் பாட்டு போடுறதுக்குள்ளே எல்லாரும் சீக்கிரம கிளம்பிடுங்க.. எப்பா தாங்க முடியலடா சாமி! " என்றேன்.

"அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்த்து"

மக்களின் மனோபாவத்தை புரிந்து கொள்ள முடிந்தது..

விக்ரமன் இந்த "சென்னைக் காதல் " மூலம் தனக்கு இருந்த பெயரை கெடுத்துக் கொண்டார் என்று நினைக்கிரேன்.

நம்ம "விமர்சக வித்தகர்" விழியன் இந்தப் படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டுகிறேன்.


பின்குறிப்பு1 : உங்களுக்கு பிடிக்காதவங்க யாராச்சும் இருந்தா அவங்களை இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்க :))

பின்குறிப்பு2 : ஆனா !விழியன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் :))
-
--

ராமா!