PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Saturday, January 01, 2011

2011 வாழி !


கல்வியும் கலையும் ஞானமும் பெருகவே
யோகமும் தியானமும் நம்மில் சிறக்கவே!
தியாகமும் யாகமும் எங்கும் பரவவே
சிந்தையும் தெளிவும் தேடலில் கிட்டவே!
நல்லோர் வல்லோர் நட்பும் சூழவே
வற்றாப் பொருளும் வளமும் ஓங்கவே!
ஆதியந்தப் பிரபுவின் அருளைப் பெற்றே
அன்பர் அனைவரும் வாழ்வாங்கு வாழி!

Labels: , ,

Tuesday, December 14, 2010

கட்டைவிரல்


"ட்டைவிரல் ரேகை கூட நின்
தனித்துவத்தைச் சொல்லும் போது
கலக்கம் ஏன்? களத்தில் குதி!
மெய்வருத்தக் கூலி தரும்
முயற்சியை பயிற்சியோடு செய்
விடாமுயற்சி வெற்றியே தரும்!"

Saturday, March 06, 2010

தேனாம்பேட்டை TNEB

நான் தற்போது வாடகைக்கு குடியிருக்கும் அபார்ட்மெண்ட் ஓனர் ரொம்ப நல்லவர். மற்றவர்கள் மாதிரி யூனிட்டுக்கு ரூ 4 , ரூ 5 என்று வசூல் செய்யாமல். மின்கட்டண அட்டையில் என்ன வருகிறதோ அதை நீங்களே நேரடியாகக் கட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னதில் நான் ஆச்சரியப்பட்டு போனேன்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் மின் கட்டணம் கட்ட வேண்டும் என்பதால் பணிக்கிடையில் கிடைக்கும் நேரத்தில் பணத்தை கட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்து (3.3.2010) அன்று TNEB நோக்கி "சரியான சில்லறையை" கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

டி.எம்.எஸ் வளாகத்தில் முதல் மாடியில் அந்த அலுவலகம் இருக்கிறது. வேக வேகமாக அந்த அலுவலகம் நுழையும் போது மணி மதியம் 12.30 ஆகிவிட்டது. ஒரு சிலர் முணு முணுத்தப்படி வெளியேறினர்.சிலர் கட்டணம் கட்டும் (Counter) கவுண்டர்ஸ்களில் :) சத்தம் எழுப்பியபடி இருந்தார்கள் . 12.30 - 1.30 அவர்களின் மதிய உணவு இடைவேளை என்பதால் 1.30 க்கு வாருங்கள் என்று மின்வாரிய ஊழியர்கள் வந்தவர்களைஅனுப்பிய படி இருந்தார்கள். அது சரிதான் அவர்கள்தான் பெரிதாய் எழுதிப் போட்டுள்ளார்களே! போதாதக் குறைக்கு மின்கட்டண அட்டையின் பின்னே கூட அந்த நேரம் இடம் பெற்றுள்ளதே என்று அமைதியானேன். சிலர் கெஞ்சிய படி நின்றனர். "சார், நான் அங்கே இருந்து வர்றேனுங்க் சார்..ப்ளீஸ் சார் ..கொஞ்சம் பண்ணிக் கொடுங்க " என்றார்.. "இன்னொருவர் சார் ..லீவு கிடைக்காது சார்..நான் வேலை செய்யுற இடம் ரொம்ப தூரத்தில் இருக்குது சார்" என்று கெஞ்சியபடி இருந்தார். நான் எதுவும் பேசவில்லை. மின்வாரிய ஊழியர்கள் ரூல்ஸ் & ரெகுலேஷனை சரியாக பாலோ பண்ணுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். நம் மின்கட்டணத்தைக் கட்ட இன்னும் 1 மணி நேரத்தை போக்கடிக்க வேண்டும் என்ற கவலையில் அந்தப் பரந்த அறையில் இருந்த ஒரு இருக்கையில் அமரலானேன்.

சிலர் கலைந்து சென்றார்கள். ஒரு வயதான பெரியவர் மட்டும் என் அருகில் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுக்க முயற்சித்தேன் . அவர் பேசவில்லை. ம் அவருக்கு என்ன கவலையோ எனக்குத் தெரியவில்லை. மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அதில் கொஞ்சநேரம் நம்ம வேலையைப் பார்க்கலாம் என்று என் வேலையில் இறங்கினேன். "புரியுது சார் புரியது ..என் கிட்டே நீங்க என்ன கேட்க வாரீங்கன்னு? மடிக்கணினி வச்சிருக்க ..இண்டெர்நெட் இருக்குது ..பேசாம ஆன்லைனில் பணத்தைக் கட்டிட்டு வேலையைப் பார்ப்பீயா ...வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து பதிவு போட்டுட்டு இருக்கான்னு சொல்ல வாரீங்க அப்படித்தானே... " ஹி ஹி ..என் இண்டெர்நெட் அக்கவுண்ட் ப்ளாக் ஆனதால இப்படி கியூவுக்கு வர வேண்டியதாய்ப் போச்சு. வெளியில கொஞ்சம் அங்கே இங்கேன்னு சுத்திட்டு வந்தாதான் நமக்கு மத்தவங்க படுற கஷ்டமும் புரியும். என்ன பண்றது ...இப்ப என் கஷ்டத்தை சொல்லி உங்களைப் படிக்க வச்சிட்டேன் பாருங்க... :)

மேலும், அந்த அலுவலகத்தை மெதுவாக நோட்டம் இட்டேன்.

மின்கட்டணத்தை செலுத்த 6 கவுண்ட்டர்கள் மற்றும் 2 ஸ்பெஷல் கவுண்ட்டர்களும் அங்கு இருந்தது ( கவுண்டர்க்கு தமிழ்ல எப்படி சொல்றதுன்னு சொல்லுங்கண்ணா..தப்பா நான் ஜாதி வெறியில் எழுதுறேன்னு நினைச்சிடப் பிடாது நீங்க ! ஆமாம் சொல்லிப் புட்டேன்!)

சின்ன சின்ன அழகான வாசகங்கள் மின்சார சேமிப்பைப் பற்றி ஆங்கிலம் மற்றும் தமிழில் சுவரில் ஒட்டப் பட்டு இருந்தது.

" தேவையில்லா இடத்தில் சுழலும் மின்விசி ஏன்? ஒளிரும் மின்விளக்கு ஏன்?"

" Save Energy for Brighter Tomorrow "

மின்சார வாரியத்தில் ஒரு வருடம் பணியாற்றியவன் நான் என்ற முறையில் நவீனப் படுத்தப்பட்ட அந்த அலுவலகம் கொஞ்சம் எனக்கு பெருமையைத் தந்தது.

மேலும் சிந்திக்கலானேன் ..இதே அலுவலகம் தனியார் வசம் இருந்தால் ...பணத்தை கட்ட வருபவர்களிடம் லஞ்ச் டைம் பற்றி பேசி இருப்பார்களா?

வரும் பணத்தை வாங்கிப் போடும் வித்தைகூட இவர்களுக்குத் தெரியாதா?

கஸ்டமர் சர்வீஸ் என்பதற்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை என்ன?

இன்னும் ஆதிகால அலுவலக விதிமுறைகளையேத்தான் கடை பிடிக்கணுமா?

6 கவுண்டர்களில் ..ஒரு 3 கவுண்டர்களுக்கு மட்டும் மதிய உணவு இடைவேளை நேரத்தை மாற்றி இருந்தால் ..உதாரணமாக மதிய இடைவேளையானது முதல் 3 பேர்களுக்கு 12.30 - 1.30 , அடுத்த 3 பேர்களுக்கு 1.30 - 2.30 என்று வகைப்படுத்தி இருந்தால் ...இப்படி கஸ்டமர்கள் கஷ்டப்படத்தேவையில்லை அல்லவா?.

வீடு ஒரு இடத்திலும், அலுவலகம் வெகு தொலைவிலும் இருக்கும் அன்பர்கள் குறிப்பிட்ட இந்த நேரத்தில் மட்டுமே பணத்தை செலுத்த வேண்டும் என்று சொன்னால் அவர்களின் அலுவல் தடைபடாமல் இருக்குமா?

அனைத்து தரப்பினராலும் இண்டெர்நெட் மையத்தை அணுகி பணம் செலுத்த முடியுமா?

என்றெல்லாம் என் மனதில் கேள்விகள் எழுந்தபடி இருந்தது....

அலுவலகம் வெறிச்சோடி இருந்தது ... என்னையும் அந்தப் பெரியவரையும் தவிர யாரும் அங்கு இல்லை. கிட்டத்தட்ட 8 மின்விசிறிகள் சுழல்ந்தபடி, 10 மின் விளக்குகள் இந்தியா ஒளிர்கிறது என்று ஒளிர்ந்தபடி இருந்தது. " தேவையில்லா இடத்தில் சுழலும் மின்விசிறி ஏன்? ஒளிரும் மின்விளக்கு ஏன்?" ( அவர்கள் ஒட்டியிருந்த வாசகங்களை இப்போது பார்க்கும் போது எனக்கு ஏதோ நையாண்டி செய்வது போல் இருந்தது )

மின்சார சிக்கனம் தேவை இக்கணம் என்று சொன்னால் மட்டும் போதுமா...அதை சொல்பவர்கள் முன்மாதிரியாக கடைபிடித்துக் காட்ட வேண்டாமா ? என்ற கேள்வியோடு பக்கத்தில் இருந்த பெரியவரோடு மீண்டும் பேச்சுக் கொடுக்கப் பார்த்தால் அவர் சுரத்தையே இல்லாமல் இருந்தார்.

அங்கு இருக்கும் சுவர்க்கடிகாரத்திலும் என் அலைபேசியிலும் ஒரே நேரம்தான் ஓடிக் கொண்டு இருந்தது . மணி 1.15 ஆகி விட்டது.. வெளியில் சென்றிருந்த மி.வா.ஊழியர்களும் , பணம் கட்டவந்த அன்பர்களும் ஒவ்வொருவராக மீண்டும் உள்ளே நுழைந்தன்ர்.

மி.வா.ஊ சிலர் கவுண்டர்களில் இருப்பதைப் பார்த்த ஆர்வத்தில் ஒரு சிலர் பணத்தைக் கட்ட மீண்டும் முயற்சித்தனர்.

" 1.30 மணிக்கு தான் சார் ...கட்ட முடியும் ..அங்கே வெயிட் பண்ணுங்க ..என்று கையைக் காட்டினார் " அந்த ஊழியர்.

"கடைசி நாளில் போய் நின்னாலும் காத்துக் கிடக்கணும் , இப்படி 3 ம் தேதியே போய் நின்னாலும் காத்துதான் கிடக்கணும் ..என்ன கொடுமை சரவணன் " என்று என்னையே நான் நொந்துக் கொண்டேன்.

மணி 1.20 ஆகி விட்டது.

அந்த நேரத்தில் கருப்புக் கலர் சுடிதாரில் ஒரு மின்னல் கரகம் ஆடிய நடையோடு உள்ளே வந்தது ... கையில் பெரிய்ய்ய தோல் பை, ..இன்னொரு கையில் கார் சாவி, கொஞ்சம் சோகம் அப்பிய முகத்தோடு இருக்கையில் அமர்ந்து விட்டு ..பின் சட்டென எழுந்து 5 ஆம் கவுண்டர் அருகில் சென்று நின்றது. அங்கு இருந்த மி.வா.ஊழியர் பக்தி பரவசத்தோடு விசாரித்தறிந்தார்!

இதுவரை "உம்" என்று மூஞ்சை வைத்திருந்த பெரியவர் ..குதூகலமாகி ...உணர்ச்சி வசப்பட்டு .."அது உங்களுக்கு யாருன்னு தெரியுதா?" என்று என்னைப் பார்த்து கேட்டார்.

'அட, இந்தாளுக்கு பேச்சுக் கூட வருமா?' ...என்று மனதில் நினைத்துக் கொண்டு ...இப்போ நான் சுரத்தை இல்லாமல் "ம் " தெரியும் என்று தலையை ஆட்டினேன்.

அவரோ அந்தப் பெண்ணை அப்படி பார்க்கவும் இப்படிப்பார்க்கவுமாக இருந்தார்.

அந்தச் சுடிதாருக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் அல்ல நீங்கள் நினைக்கும் அந்தக் கரகாட்ட நடிகையே தான் அவர்.

மணி 1.25 - கரகாட்டப் புன்னகையால் கவுண்டர் திறந்தது :) மி.வா.ஊ ஆர்வத்தோடு அவரது மின் அட்டைகளை வாங்கிக் கொண்டு பதிவு செய்ய ஆரம்பித்தார்..

அட ..1.30 மணிக்கு தான் இனி வேலை செய்வோம்ன்னு ஸ்டிரிக்ட்டா சொன்னாங்க...இப்ப 1.25 க்கே ஒரு கவுண்ட்டர் திறந்திடுச்சே என்று ஆச்சரியப்படு ஆளுக்கொரு கவுண்ட்ரை நெருங்க ..தர்மசங்கடத்தில் மி.வா.ஊ நெளிந்து வேறு வகையில்லாமல் அனைத்துக் கவுண்ட்டர்களையும் திறந்து விட்டார்கள். எனக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.


இந்த சினிமா மோக மக்களை "காக்க காக்க கனக வேல் காக்க " என்று நினைத்த படி கட்ட வேண்டிய கட்டணத்தைக் கட்டிவிட்டு வெளியே வந்து ...இவர்களின் செயல்களை எல்லாம் மனதில் நினைத்தப்படி என் இருசக்கரவாகனத்திற்கு ஓங்கி ஒரு உதை விட்டேன் . என்ன ஆச்சரியம்!!வண்டி உடனே ஸ்டார்ட் ஆகி விட்டது! :)

நன்றி!

பி.கு: இனி அஞ்சல் அலுவலகங்களிலேயே மின்கட்டணம் கட்டும் வசதி கொண்டு வருகிறார்களாம்.. என் அஞ்சலக அனுபவத்தை விரைவில் பதிகிறேன்.


Labels: , , ,

Thursday, October 15, 2009

ஜெயமே ஜெயம் 17 - பாராட்டுவோம்!


நம்பிக்கையின் வெற்றிக்கு தங்கள் படைப்புக்களால், பின்னூட்டங்களால், வாசகர்களாய் தொடர்ந்து பங்கு ஆற்றி வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் முதலில் அடியேனின் மனம் திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஏங்குவது இந்த ஒரு விசயத்திற்காகவும்தான்.

பாராட்டுதல் என்பது ஒருவனை ஊக்கப்படுத்தும் உற்சாகப் பானம்.

ஒரு அளவுக்கு மேல் சென்றால் போதையில் ஆட்டம் கண்டவன் போல, ஆட்டம் காண வைத்து விடும்.

கோடி கோடியாக ஒருவனிடம் பணம் கொட்டிக் கிடந்தாலும் அவனை ஒரு நான்கு பேர் போற்றாவிட்டால் பைத்தியமாகி விடுவான். புகழுக்கு மயங்காதார் இந்த பூவுலகில் இல்லவே இல்லையே!

அதனால்தான் பல ஞானியர்கள் புகழைக் கண்டு அஞ்சி அஞ்சி ஓடி ஒளிகிறார்கள்.

பாராட்டு/ புகழ் என்பது அவ்வளவு பயங்கரமானதும் கூட .... :)

ஒவ்வொருவரும் மற்றவரின் அங்கீகாரத்திற்காக , பாராட்டுதலுக்காக ஏங்கி ஏங்கித் தவித்து இருக்கிறார்கள்.

நாம் என்னதான் பெரியச் செயல்களை சத்தமின்றி சாதித்தாலும் , மற்றவர் நம்மைப் பாராட்டும்போதுதான் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஊக்கமும் கொள்கிறோம், தன்னம்பிக்கை மேலும் பெறுகிறோம்.

நமக்கு கிடைக்கின்ற பாராட்டுதல் உண்மையான பாராட்டாக இருந்தால் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான்.

பாராட்டு நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நாம், ஏன் மற்றவர்களுக்கு இந்தப் பாராட்டைக் கொடுக்கவேண்டும் என்று இனி நினைக்கக் கூடாது!. ஒரு இரண்டு நாள் இந்த வழிமுறையை வலுக்கட்டாயம் ஆக்கிக் கொள்ளுங்கள். அப்புறம் என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து நோக்கி அடியேனுக்கு மடல் அனுப்புங்கள் . என்ன ? சரிதானே ...!

எச்சரிக்கை ! அடியேன் முன்பே சொன்னார்போல் நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் பாராட்டு உண்மையானதாக இருக்கவேண்டும். நடிகர் வடிவேல் நகைச்சுவை போல்... ஏட்டைப் பார்த்து கூர்க்கா என்பதும் , ஐ.ஜி யைப் பார்த்து ஏட்டா என்பதும் அடிவாங்கத்தான் வைக்கும். :) அதற்கு யான் பொறுப்பில்லை!

"ஆமாம் மச்சி ! அவனை நாக்கைப் பிடுங்குற மாதிரி நல்லா கேட்டேடா கேள்வி, சூப்பர்டா, நானா இருந்தா வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிருப்பேன் டா " என்ற ரீதியில் நம் பாராட்டு இருக்கும் எனில் பின்னாளில் நாமும் தான் கம்பி எண்ண வேண்டி வரும்.

ஆகவே, நம் மனதில் இருந்து உண்மையான நல்ல விசயங்களைப் (மட்டும்) பாராட்டுவோம்.

புகழ் என்பது தலைக்கு மேல் ஏறி கர்வம் கவ்விக் கொள்ளாத வரைக்கும் தப்பில்லைதான்.

மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது , உண்மையாய் இருந்தால் நன்றி சொல்லுவோம் .அவர்களைத் திருப்பிப் பாராட்டுவோம்.

" சார் உங்கள் உழைப்பை பார்த்து வியக்கிறேன்.. நீங்கள் உண்மையிலேயே சாதனையாளர்தான் " என்ற பாராட்டு உண்மையானதாக இருந்தால். உங்கள் சாதனையை தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள். " எல்லாம் தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களால்தான் இந்தச் சாதனைகள் சாதிக்க முடிகிறது " என்று சொல்லிப் பாருங்கள்... அவர் பின்னர் எப்படி மகிழ்ச்சி அடைகின்றார் என்று பாருங்களேன்?.

பணத்தை விட மனிதன் அதிகம் ஏங்குவது புகழுக்காகத்தான்.

இறைவனை நாம் வணங்கும் போது கூட அவன் புகழ் பாடியே வணங்குகிறோம். கொடுப்பது நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இயல்பாகவே நமக்கு அமைந்துவிட்டது. போற்றுதல் என்றுமே போற்றுதலுக்கு உரியதே!

விருப்பு வெறுப்பற்ற பாராட்டு என்பது மேலும் விரும்பத்தக்கது. அதற்கு நம்மை நாம் பழக்க வேண்டும்.

இங்கே எல்லோரும் அறிந்த ஒரு கதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புகழுக்கு மயங்காத அரசன் ஒருவன் அவன் நாட்டில் போட்டி ஒன்று அறிவித்தான். இதுதான் போட்டி " என்னை புகழ்ந்து நான் மகிழும்படி செய்பவர்களுக்கு 5000 தங்க காசுகள் என்று அறிவித்தான்.

ஆனால், போட்டி விதிமுறை சற்றுக் கடுமையாக இருந்தது .. மன்னனை மகிழ்விக்க எந்த முயற்சி வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆனால் , அவர் மகிழவில்லை என்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதுதான் போட்டியாளார்களைக் கொஞ்சம் அதிரவைத்தது.

போட்டி ஆரம்பித்தது. நாட்டின் கவிஞர்கள், புலவர்கள் , விகடகவிகள் முதல் நம் கலக்கப்போவது /அசத்தபோவது யாரு சாம்பியன்ஸ் வரை அனைவரும் வரிசையில் நின்றனர்.

மன்னனை மகிழச் செய்ய வந்த போட்டியாளர்கள் பாடினார்கள், ஆடினார்கள், நகைச்சுவையாகப் பேசினார்கள் , பலவாறு புகழ்ந்தார்கள், பல அரியப் பொருட்களைப் பரிசாகக் கொண்டு வந்தார்கள் மன்னனோ வி.ஜி.பி சிரிக்கா மனிதன் போல் உம்மென்று இருந்தான் . வெற்றி பெறமுடியாதவர்களுக்கு சிறைத்தண்டனை , அடி உதை என்று அனைத்தும் :) வழங்கினான். மன்னனின் கொட்டத்தை யாராலும் அடக்க முடியவில்லை. அவ்வூரில் இருந்த ஒரு புத்திசாலி சிறுவனும் மன்னனை மகிழ்ச்சியுற செய்யப் போகிறேன் என்று களத்தில் குதித்தான்.

போட்டி நடந்த படியே இருந்தது.. மன்னனை மகிழ்விக்க/ புகழ்ந்து பாட பலர் வரிசையில் காத்திருந்தபடி இருந்தனர். நம் சிறுவன் சேலம் மல்கோவா மாம்பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். அரசனை பார்க்கும் முறை இவனுக்கு வந்தது. அரசன் ஆச்சரியப்பட்டு போனான்.. "என்னடா ..இந்தப் பொடிப் பயல் என்னை மகிழ்விக்கப் போகிறானா? " என்று மனதில் ஏளனமாக நினைத்துக் கொண்டு ..".ம் ம் சொல் " என்று சிறுவனை நோக்கினார்.

சிறுவன் அரசனுக்கு வணக்கம் தெரிவித்து, " அரசே! உலகிலேயே மிகவும் விலைமதிக்க முடியாத மாம்பழத்தை நான் தங்களுக்காக எடுத்து வந்து இருக்கிறேன் " என்றான்.

அதற்கு அரசன், "ஏய் பொடியனே ...எல்லாவகை மாம்பழமும் எனக்குத் தெரியும் .. ".என்று கர்ஜித்து ..... தன் காவலாளிகளை அழைத்து..." இவன் சிறுவன் என்பதால் இவனுக்கு பெரிய தண்டனை கொடுக்க வேண்டாம்... அவன் கொண்டு வந்த மாம்பழத்தை அவன் வாயில் முழுமையாக திணித்து அவனை உண்ண வையுங்கள் " என்று கட்டளை இட்டான். சிறுவனை நினைத்து அவை பரிதாபப் பட்டது.

ஆனால்..நம் சிறுவனோ ... விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் :)

அவையோடு அரசனும் சேர்ந்து ஆச்சரியப்பட்டான்..."ஏய்ப் பொடியனே ...தண்டனை என்னவென்று தெரிந்துமா சிரிக்கிறாய்...உன்னை என்னச் செய்கிறேன் பார்..." என்றபடி தன் இருக்கை விட்டு எழுவும்... சிறுவன் அரசனை நோக்கி,

"மன்னாதி மன்னனே! அடியேனை மன்னிக்கவும். இந்த வரிசையில் தங்களைக் காண காத்திருக்கிறாரே அந்த முதியவர் , அவர் நிலைமையை யோசித்துப் பார்த்த போதுதான் அடக்கமுடியாத சிரிப்பு வந்து விட்டது என்றான்.

அரசனுக்கு சிறுவனின் செய்கை மிக்க ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. " என்னவென்று தெளிவாக சொல்" என்று அரசன் கேட்டான்.

" மன்னா! நான் கொண்டு வந்ததோ ஒரே ஒரு மாம்பழம்..அதை அப்படியே சாப்பிடும் படி தண்டனை கொடுத்து விட்டீர்கள்.. ஆனால் அந்த பல் இல்லாதப் பெரியவரோ மிகப்பெரிய பலாப் பழத்துடன் உங்களைக் காண வந்திருக்கிறார்.. அவருக்கு இதே மாதிரி தண்டனை கொடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன் ...என்று சொல்லி மீண்டும் சிரிக்க... அரசன் தன்னையும் மறந்து அவையினரோடு சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

சிறுவன், " எங்கள் மன்னா! இந்த உலகில் புகழுக்கு மயங்காத ஒருவன் உண்டு என்றால் ..அது நீங்கள் மட்டும்தான் மன்னா!" என்றான்.

அரசனுக்கோ தலைக்கால் புரியவில்லை...தன்னை மகிழ்வித்த அந்தச் சிறுவனை வெகுவாகப் பாராட்டி பரிசுகள் வழங்கினான். பின் தன் தவறையும் உணர்ந்து அப்பாவி மக்களை விடுதலை செய்து மெய்யான புகழையும் பெற்றான்.

ஏற்கனவே தெரிந்த கதைதான் இருந்தாலும் ..இனி நீங்கள் இந்தக் கதையினை வித்தியாசமாகத் தங்கள் வாழ்க்கையோடு அணுகுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஆகவே , அன்பர்களே! பாராட்டுதல் என்ற கலையை நாம் கவனமாகக் கற்றுக் கொள்வோம்.. அடியேன் சொல்லவரும் பாராட்டுதல் என்பது துதிபாடுதல் அல்ல! அதாவது "சோப்பு போடுறது , கம்பி விடுறது , தொப்பி வைக்கிறது, சிங் ஜா போடுறது, நூல் விடுறது" என்றெல்லாம் சொல்வார்களே ... அந்தமாதிரியான விசயம் அல்ல.

பாராட்டுதல் என்பது இயல்பாகவே பாராட்டுவது ஆகும் என்று சொல்லி, நம்பிக்கை நண்பர்களை மீண்டும் பாராட்டி , இன்னொரு இனிமையான பதிவில் உங்களையெல்லாம் சந்திக்கின்றேன் என்று சொல்லி விடைபெறுகின்றேன்!

பாராட்டுங்கள் பாராட்டப்படுவீர்கள்!

தீபாவளி வந்திருச்சு !



"அப்பா கம்பி மத்தாப்பு வாங்கித் தாப்பா .." என்று அனுசுயா டிவியில் வரும் தீபாவளி விளம்பரம் பார்த்து கேட்கவும் பட்டாசு வாங்க கிளம்பினேன்.

"வெடிக்கும் வெடிகள் எதுவும் வாங்கக் கூடாது " என்று அனுசுயா அம்மா கண்டிஷன் போட....

"ஏம்ப்பா ..வெடி வெடிக்கலைன்னா அவங்களுக்கு வியாபாரமே நடக்காதுப்பா ... வாங்குற வெடியை அப்போ ஃப்ரிட்ஜ் ல்ல தான் வைக்கணும் அப்போதான் அது வெடிக்காத வெடியாய் இருக்கும்" என்று யான் கலாய்க்க, தேனாம்பேட்டை யில் இருக்கும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் பண்டகசாலையில் ( TUCS ) சிவகாசி விலைக்கே ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் - ன் பட்டாசுக்கள் கிடைக்கும் என்பதால் (கூட்டத்தை தவிர்க்க) இன்றே வாங்கி விடுவோம் என்று கடந்த வெள்ளி இரவு 8.30 மணிக்கு சென்றேன். (TUCS த்தான் நமது நாட்டின் முதல் கூட்டுறவு பண்டக சாலை என்பது ஒரு அரிய செய்தி. கி.பி 1904 முதல் செயல்பட்டு வருகிறது.)

அங்கே கூட்டம் அவ்வளவாக இல்லை .. பட்டாசுக் கடைக்குள் நுழையும் போதே சின்ன பயமும் வந்து விடுகிறது.. சின்ன வயதில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் புஸ்வானம் வைக்கும் போது அது பூமாரி பொழியாமல் வெடித்து விட்டது. கடவுள் கிருபையால் என் கண்கள் தப்பியது ...கைமட்டும் பெரும் காயத்துக்கு உள்ளானது,...இன்னமும் அந்த தழும்பு இருக்கிறது. கடையில் மொத்த பட்டாசுகளை பார்த்ததும் வெடித்தால் என்னாகும் என்ற தப்பான கற்பனையால் அந்த பயம் வந்திருக்கக் கூடும்.
அது சரி விசயத்திற்கு வாருங்கள்...பழ வியாபாரிகள் பழத்தை அழகாய் அடுக்கி வைப்பது போல் , கரியாகப்போகும் காசுக்கள் கலர் கலரான பொட்டலங்களில் கண்கவர் அழகாய் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

உள்ளே நுழைந்து விலைப்பட்டியல் கேட்டேன்.. A4 அளவில் பக்க புத்தகத்தை கையில் தந்தார்கள்.. படித்து விட்டு திரும்பக் கொடுக்கணுமா? என்று கேட்டேன் ..இல்லை! அது உங்களுக்குதான் ... அதில் என்னவேண்டும் என்று குறித்துவிட்டு தந்தால் விலைபோட்டுத் தருகிறோம் என்றார்கள். வார பத்திரிகைபோல் இருந்த அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்..:)

கிட்டத்தட்ட 900 க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகள் பட்டியலிடப்பட்டு இருந்தது. நமக்கு தேவையான கம்பி மத்தாப்பு, புஸ்வானம்( Flower Pots), தரைச்சக்கரம் இவற்றை மட்டும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி விட்டு பில் போட்டுக் கேட்டால்..அது கிட்ட தட்ட ரூ 500/- ஐ தாண்டி விட்டது. ' அம்மாடி இவ்வளோ ஆயிட்டா' ..என்று யோசித்தேன். உடனே அருகில் இருந்தவர் .."சார் ..இதையே நீங்க வெளியில வாங்கினீங்கன்னா ரூ 700/- தாண்டிடும் என்று சொல்லவும்...கொஞ்சம் சமாதானம் ஆனேன்.

எனது இடது புறம் , ஒரு பெரியவர் தன் மனைவியுடன் வந்து இருந்தார்...கிட்டதட்ட 65 வயதிருக்கும்.. தன் மணிபர்சை எடுத்து பணத்தை எண்ண ஆரம்பித்தார்... அத்தனையும் ரூ 500/- நோட்டுக்கள்.. எண்ணினார் எண்ணினார் எண்ணிக் கொண்டே இருந்தார்... என் கண்கள் அவர் கையில் வைத்திருந்த பில்லைப் பார்த்தது.. கிட்டதட்ட ரூ 27,000/- க்கான பில்லை கடைக்காரரிடம் நீட்டினார். நான் உறைந்தே போனேன்.. அடேங்கப்பா ..இவ்வளவு பெரிய தொகைக்கு கரிவாங்கிக்கிட்டு போறாரே என்று யோசித்தேன். அவரை கடைக்காரர்கள் விழுந்து விழுந்து கவனித்த விசயம் அதைவிட அலாதியானது.

முகத்தில் எந்தச் சலனமும் காண்பிக்காத அந்த பெரியவர் ...கடைகாரரிடம் 'மொத்தமாக பார்சல் செய்து என் வண்டியில் ஏற்றிவிடுங்கள்' என்று சொன்னார்..

நான் வாங்கியப் பட்டாசுக்கள் அப்படியே என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தது.

யோசித்துப் பார்த்தேன்... என் சின்ன வயதில் அதிகப்பட்சம் நான் வாங்கிவெடித்த பட்டாசுக்களின் மதிப்பு ரூ 100/-. தான் இருக்கும்... அதிலேயும் ...இரண்டு பாக்கெட் லட்சுமி வெடி, ஒரு துக்கடா சரம் மற்றும் ஒருபிஜிலி சரம் வாங்கி ...வீட்டிற்கு முன் வெடித்து...பக்கத்தில் வெடித்த பட்டாசு குப்பைகளை அப்படியே நம் வீட்டின் முன் கொண்டு வந்து நான்தான் நிறைய வெடிகள் வெடித்துள்ளேன் என்று எங்கள் காலனியில் ஒரு வீறுநடை மறுநாள் போடுவதுண்டு. அதிகாலையிலேயே எழுந்து பட்டாசு வெடித்த கையோடு அம்மா பூஜை அறையில் படையல் இட்டு வைத்திருக்கும் பதார்த்தங்களை பதம் பார்த்துவிட்டு, தீபாவளி மறுநாளில் வெடிக்காத , வெடித்த பட்டாசுக்களின் கந்தகப் பொடியை ஒரு காகிதத்தில் தட்டி அதை பற்ற வைத்தது (மிகவும் ஆபத்தான விளையாட்டு இது, மின்னல் போன்று அது மின்னும் அழகு மிக அழகாய் இருக்கும் ) என்றெல்லாம் .. அந்த நாட்களை நினைத்தால் அடக்க முடியாத சிரிப்பு வருகிறது. இந்த அனுபவம் கண்டிப்பாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

பட்டாசு வெடித்தல் சரியா ? தவறா என்ற பிரச்சனை எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். இந்தப் பிரச்சசனைக்கு எந்த நாட்டாமையாலும் தீர்ப்பு சொல்ல முடியாது , பெரிய பட்டிமன்றமே நடத்திடலாம் என்ற சிந்தனையோடு வீடு வந்து சேர்ந்தேன். தூங்கியபடி இருந்த அனுசுயா என் சத்தம்கேட்டு துள்ளி எழுந்து உற்சாகத்தோடு அப்போதே கம்பி மத்தாப்பை பற்ற வைக்க ஆயத்தம் ஆனாள் [ இன்னும் ரூ 500க்கு நான் பட்ஜெட் போடனும் போலும் :-( ]

அவள் கம்பி மத்தாப்பு போல் ஆனாள்! நான் புஸ்வானம் போல் ஆனேன்! :)

அளவுக்கு மீறினால் அமுதமே நஞ்சாகும் போது ...பட்டாசு மட்டும் எம்மாத்திரம்.?

ஆகவே! பக்குவமா பட்டாசு வாங்குங்க...பத்திரமா வெடியுங்கள்...!

எங்க வீட்டுக்குத் தீபாவளி வந்திருச்சு .. அப்போ நீங்க.....


"பாவமாக முகத்தை வைத்திருந்த
பையன் சிவகாசியைக் கேட்டேன்,
தம்பி பட்டாசு வெடிக்கலையா? என்று...
'இல்லை அண்ணா!
அதை செய்வது மட்டுமே என் வேலை' என்றான்
தன் கந்தகக் கண்களில் கண்ணீரோடு!"

- ராமா, நம்பிக்கை குழுமம்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

எங்கள் இறைவா,
எப்படிப் பிடித்தாலும்
மேல் நோக்கியே எரியும்
தீபம் போல்
நின் நோக்கியே இருக்கும்படி
எம்மைச் செய்வாய்!

Tuesday, March 20, 2007

ஸ்ரீராமநவமி அழைப்பிதழ்!


குரு வாழ்க! குருவே துணை!


மெய்யன்பர்களே!

எல்லாம் வல்ல இறையோன் அருளால் வருகின்ற மார்ச் 27, 2007 ல் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீமத் மாருதிதாஸ சுவாமி களின் தலைமையில் நடைபெற இருக்கும் ஸ்ரீராமநவமி விழாவிற்கு தாங்கள் வருகை தந்து இறையருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்:

நாள்: 27. 03.2007 (செவ்வாய்)
இடம்: மாருதி இல்லம் , ஸ்ரீவைகுண்டம்
காலை 10.00 மணி : ஸ்ரீவைகுண்டம், கள்ளபிரான் கோவிலில் அர்ச்சனை
மாலை 6.00 மணி: ஸ்ரீராமநாம ஜெபம்,
இரவு 7.00 மணி: அஷ்டோத்ரம், சதநாமாவளி, புஷ்பாஞ்சலி
இரவு 8.00 மணி: அருட்பிரசாதம்





அம்பரநிறத் தினாய்! சிலையேந்தி சீதையி
லக்குவ பரதசத் ருக்க னோடு
அம்பரந்தாண் டியே உன்பணி செய்திடும்
சஞ்சீவி திருவடிப் பற்றி நிற்க
அம்பரமெட் டிலும் பரவியப் பரமனே!
புவிமீதில் மானுட வடிவங் கொண்டாய்!
அம்பரமா மிந்த உலகெலாம் எனினும்நீ
என்மனக் கோவிலை வந்த டைந்தாய்!

( அம்பரம் - ஆகாயம், கடல், திக்கு, உடை என பல பொருள்கள் உண்டு)

ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஆஞ்சநேயா!

இப்படிக்கு
குருபாதம் பணியும்,
ராமா

Friday, February 09, 2007

‎Nambikkai Birthday Celebrations - Kavithai Competition



குரு வாழ்க! குருவே துணை!

இணையத்தின் இனிய நண்பர்களே! வணக்கம்!

உங்கள் நம்பிக்கையினால் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது இரண்டாம் அகவையினை ஏப்ரல் 23, 2007 - ல் கொண்டாடுகிறது. நம்பிக்கை குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை தன் சகோதர குழுமத்தின் கொண்டாட்டத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்து சிறப்பான போட்டி ஒன்றை நடத்த உள்ளது.

சென்ற வருடம் நடத்திய கவிதை./ கட்டுரை/கதை போட்டிகளில் பலர் சிறப்பாக பங்கெடுத்து சிறந்த பரிசுகளை அள்ளிச் சென்றார்கள். அவர்களுக்கும் , பரிசுகளை வழங்கிய நண்பர்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்.

இந்த ஆண்டிற்கான போட்டி சற்றே வித்தியாசமானது.

கவிதைப் போட்டி மட்டும் நடத்த உள்ளோம்.. தலைப்பு காதல் பற்றியது ..

என்னடா இது நம்பிக்கையில் காதல் கவிதையா? ஆ! என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. தலைவன் தன் தலைவிமீது பாடும் காதலாய் கவிதை இருத்தல் வேண்டும்.

சின்ன விளக்கம் இங்கே..

காதல் கவிதைகள் நம்பிக்கையில் வேண்டாம் என்று நான் கருதியதற்கு காரணத்தை முதலில் பணிவுடன் சொல்கிறேன். சில கவிதைகள் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிய நெளிசலை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. அந்த கவிதைகளை மாத்திரம் தடுக்கும் போது அந்த படைப்பாளிகளுக்கு வருத்தம் ஏற்படும். என்ன செய்வதென்று புரியாமல் தற்சமயம் அனைத்து கவிதைகளையும் கொஞ்சகாலம் நிறுத்தி வைப்போம் என முடிவெடுத்து தெரிவித்தேன். ஏனெனில், குழுவில் பண்புசால் பெரியோர்களும், ஆன்மீகவாதிகளும், எல்லா வயதிலும் பெண்மணிகளும் இருக்கின்றனர் அல்லவா! குழுவில் இருக்கும் அன்பர்களது புதல்வரும்,புதல்வியரும் கூட இதில் வரும் மடல்களை படிப்பது உண்டு. எனவேதான் வேறு வழியில்லாமல் அந்த முடிவைத் தெரிவித்தேன்.

ஆனாலும் பல இளைஞர்கள், பல கவிஞர்கள் நிரம்பிய இந்த குழுவில் "காதல்" என்னும் கருப்பொருளை தடை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. அதில் எனக்கு ஈடுபாடு இல்லாவில்லாவிட்டாலும் அதில் வெறுப்பு இல்லை. படைப்பாளிகளுக்கு 'காதல்' என்பது ஒரு முக்கிய கருவாகதான் விளங்கி வருகிறது...இன்று வரை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன். ஆண் கவிஞர்களுக்கு மாத்திரமேயான இந்தக் "காதல் கவிதை போட்டியில்" என்ன விசேசம் என்றால், உங்கள் கவிதை எந்த அளவிற்கு எல்லை மீறாமல் அதே சமயம் அற்புதமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க போவது பெண் நடுவர்கள். 24 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண் நடுவர்கள் இதை தேர்ந்தெடுக்க போகின்றனர். உங்களுடைய கவிதை பற்றிய உண்மையான விமரிசனம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு.

நடுவர்களின் பெயர்கள் அவர்கள் அனுமதியின் பேரில் போட்டி முடிவோடு வெளியிடப்படும். படைப்புகள் உங்கள் பெயரில்லாமல் நடுவர்களுக்கு அனுப்பப்படும்.

பரிசுத்தொகை விபரம்

முதல்பரிசு ரூ 1500/-

இரண்டாம் ரூ 1000/-

மூன்றாம் பரிசு ரூ 500/-

ஆறுதல் பரிசு ரூ 100/- தலா 10 பேருக்கு.


போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி/ விதிமுறைகள்:

1. ஆண் படைப்பாளார்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர் நம்பிக்கை உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண் படைப்பாளர்கள் நடுவர் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தால் எங்களுக்கு மடலிடுக .. பெரிதும் வரவேற்கிறோம்.

2. படைப்பாளர்கள் தங்கள் முகவரியையும் தொலைபேசி/அலைபேசி எண்ணையும் தரவேண்டும். அவை பொதுவில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதி சொல்லுகின்றோம்.

3. குறைந்த வார்த்தைகளுக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் கவிதை சிறந்ததாகக் கருதப்படும்.

4. பண்பாட்டின் எல்லையை மீறாத கவிதை பெரிதும் வரவேற்கப்படும். (இதுதான் மிக முக்கியம்)

5. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!

6. ஒருவரே அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்.

7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!

படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 02 - 2007 (புதன்) இந்திய நேரம் காலை 10.00 மணிக்குள்.

உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.
பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்களும் கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.

தங்களது கவிதையைப் பற்றி உண்மையாகத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

அனுப்பப்படும் கவிததகள் நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதையை வேறு எங்கு வேண்டுமானாலும் பிரசுரம் பண்ணலாம்.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
2.பரஞ்சோதி paransothi@gmail.com
3.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com


மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி!

இவண்,
நம்பிக்கை கூகுள் குழுமம்.
http://groups.google.co.in/group/nambikkai

Thursday, January 04, 2007

நீயே குருவாய்...



குரு வாழ்க! குருவே துணை!


நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

நாயிற் கடையோன் அடியேனை
தாயாய் அணைத்துக் காப்பாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

வாழ்வின் இலக்கணம் அறிகிலேன்- நான்
வந்ததின் காரணம் புரிகிலேன்!

பிழைக்கணும் என்றே பிறந்திட்டேன் - மீண்டும்
பிறவாது எனைக் காப்பாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

பொன் பொருள் புகழென்னும் போதையினால்- தினம்
மடிந்திடும் மக்கள் கூட்டத்திலே

நின்புகழ் அறியாமல் இருந்தேனே - நின்
தரிசனம் காணாத வரைக்குமப்பா!

கனவில் மட்டுமே காட்சி தரும்- நீ
கண்முன் காட்சித் தருவாயா?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சேயாய் நான் இங்கு தவிக்கின்றேன்
தாயாய் அமுதூட்ட வாராயா?

இனம் மொழி பேதம் காணும் இவ்வுலகில்
இதம் எங்கே கிடைத்திடும் நானறியேன்

பொய்தனை மெய்யாக்கும் புளுகரோடு - உன்
புதல்வனாய் நான் வாழ்தல் கடினமப்பா!

அடியார் அன்பையே நாடுகின்றேன் - அதை
அடியேன் மகிழவே தினம் தருவாய்

பேரிடியாய் வானம் மேல் விழுந்தாலும் - உன்
பெயர் சொல்லிடவே வரம் தருவாய்!

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சகலமும் ஆனப் பரம்பொருளே
சக்தியே சித்தியே சரண் அடைந்தேன்!

மெய்த்தவம் பற்றிட வேண்டி நின்னேன்
ஐயனே எந்தன் ஐயம் நீக்கு!

நான் வந்ததின் காரணம் புரிய வேண்டும்
வாழ்வில் உன்மணம் நுகர வேண்டும்!

கண்ணால் உனை நான் காணவேண்டும்!
கடவுளே உனை நான் அடைய வேண்டும்!

என்னைப் படைத்தவனே எங்கு சென்றாய்
என்னுள்தான் இருக்கிறாயா எங்கு சென்றாய்?

என்ன செய்திட்டால் நீ வருவாய்,
எந்தன் ஏக்கத்தை நீயும் போக்கிடுவாய்?

நீயே குருவாய் வருவாயா? இறைவா!
நீயே குருவாய் வருவாயா?

சகலமும் ஆனப் பரம்பொருளே
சக்தியே சித்தியே சரண் அடைந்தேன்!

(ஸ்ரீஅனுமன் கோயிலில் 16/12/2006 சனிக்கிழமை அன்று அடியேனுக்கு உதித்தது ! )

"சென்னைக் காதல்" - விமர்சனம்

"என்னடா ராமா நீயுமா ?" என்று சிலர் கேட்பது எனக்கு கேட்கிறது.

ஆமாங்க! வேற என்ன பண்ணுறது! :(

என்னோட மைத்துனன் குமரியில் இருந்து சென்னைக்கு வந்து இருந்தான்..

இசை, படம் இவற்றில் அவனுக்கு மிகுந்த விருப்பம் உண்டு.

"அத்தான்! சென்னையில் ஏதாவது ஒரு நல்ல தியேட்டரில் படம் பார்க்கணும் அத்தான் " என்று சொல்லி ஞாயிறு மட்டுமே எனக்கு விடுப்பு என்பதை அறிந்து சனி அன்றே வந்திருந்தான்.


"நானும் சனிக்கிழமை இரவுக்காட்சிக்கு எடுக்கவா" என்றேன்.

"சரிங்க அத்தான் என்ன படம் ? லேட் ஆயிடுமே . வெயிலுக்கு எடுங்க அத்தான் " என்றான்.

"என்ன வெயிலுக்கா ? புரியலியே "

"வெயிலுக்கு எடுங்க அத்தான் "

ஓ! இரவுக் காட்சி வேண்டாமா! அப்ப மத்தியானம் காட்சி எடுக்கத்தான் வெயிலுக்குன்னு சொல்றீயா " என்று கேட்டேன்.

"அத்தான் "வெயில்" ங்கிறது படத்தோட பேரு .. " என்றானே பார்க்கலாம்.

ஒரே சிரிப்பு..

"இந்தா பாருப்பா இந்த சினிமா விசயத்தில் நான் ரொம்ப் வீக், எனக்கும் சினிமாவுக்கு வெகுதூரம் .."

"லிப்ட்" வச்சாக் கூட எட்டாது.. கடந்த 8 வருஷத்தில் 3 படம் பார்த்திருப்பேன்.. 4 வது படம் நாம இனி பார்க்கப் போற படம் ...சரி டிரை பண்ணுறேன்.. சத்யத்தில்தான் எடுக்கப் போறேன்.. அங்க அந்தப்படம் இல்லைன்னா வேற படம் எடுக்கலாம் " என்று சொன்னேன்.

அவன் ஆசைப்படுறானே என்று அலுவலக நண்பர் மூலமாக "சத்யம் காம்பள்க்ஸ்ஸில்" வேறு எந்த படத்திற்கும் கிடைக்காததால் "சென்னைக் காதல்" என்ற படத்திற்கு டிக்கெட் எடுத்திருந்தேன். காரணம் சூர்யவம்சம், புதுவசந்தம் என்று சூப்பர் ஹிட் தந்த குடும்ப பட இயக்குனர் விக்ரமன் எடுத்த படம் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.

சத்யம் சென்றோம்!

சத்யம் காம்பள்க்ஸ் சுத்தமாக வைத்திருந்தார்கள்.

நொறுக்கு தீனிகளை வாங்கிக் கொண்டு எங்கள் இருக்கையில் அமர்ந்தோம்..

படம் போட ஆரம்பித்தார்கள்.


" அய்யோடா சாமி! என் சினிமா டைரக்டரியில் இந்தப் படமுமா வர வேணும் ... விக்ரமனுக்கு அப்படி ஜனங்க மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை..."

படம் ஆரம்பித்தது முதல் அறுவை மேல் அறுவை!

படமே பார்க்கச் செல்லாத எனக்கு "இனியும் மவனே இந்தப் பக்கம் வருவீயா ? " என்று என் மனசாட்சி தண்டனை கொடுத்தது போல் இருந்தது.

பாவம் சினிமாவை நன்கு ரசித்து பார்க்கும் பழக்கம் உள்ள என் மைத்துனன் " இருக்கையில் சுருண்டு போய், தன் இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்தபடி.. நகைச்சுவை காட்சியிலும் (?????) சோகமாக இருந்தான்.. "

" அத்தான்" என்ற படி என்னை ஒரு பார்வை பார்த்தான் ..

எனக்கு அவனுடைய நிலையைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது..

என் நிலையே எனக்கு பரிதாபமாய் இருக்கையில் அவனுக்கு வேற நான் ஆறுதல் சொல்ல வேண்டி இருந்தது.

"அத்தான் ! வீட்டில் அனுக்குட்டி(என் மகள் அனுசூயா) கூட வெளையாடிக்கிட்டு இருந்திருக்கலாம் ..உங்கக்கிட்ட தெரியாத்தனமா படம் பார்க்கணும்னு சொல்லிட்டேன் " என்றான்..

பார்க்கவே ரொம்ப பரிதாபமாய் இருந்தான்..

"மன்னிச்சிடு சதீஷ் ! நானும் சோகமாக மூஞ்சை வைத்துக் கொண்டேன்.

" விவஸ்தை கெட்ட நகைச்சுவை, 7 பாட்டோடு ஒரு குத்துப் பாட்டு , லாஜிக்கே இல்லாத காட்சிகள், விஜய் டிவி கலக்கப்போவது யாரு சாம்பியங்களை வைத்துக் கொண்டு .. அவர்களுக்கும் சரியான வாய்ப்பை கொடுக்காத காட்சிகள்.. என்று சென்று கொண்டு இருந்தது.."

இப்பவாவது படத்தில் புதிய திருப்பம் வராதா ? இப்பவாவது படத்தில் புதிய திருப்பம் வராதா ? என்று ஏங்கிக் கொண்டு இருந்தேன்.

" எங்களுக்கும்தான் இப்படியா இல்லை மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் " என்ற படி அக்கம் பக்கம் இருப்பவர்களை நோட்டம் விட்டேன்..

நிறைய பேர் தங்கள் இருக்கையை காலி செய்து இருந்தனர்..

நொறுக்குத் தீனி விற்பனை மட்டும் அமோகமாய் நடப்பதைக் காண முடிந்தது.

படம் நிறைவுற்றது..

இந்த படத்தில் விக்ரமன் அப்படி என்னக் கருத்து சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் யோசித்தேன்.

படம் "குப்பை" படம்..

சென்னைக் காதல் இந்த மாதிரி குப்பையாய் இருக்கும்னு சொல்ல வாராருன்னு என்று நினைக்கிறேன்.


படம் முடிந்த்தும் அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ரொம்ப உற்சாகம்..

கொஞ்சம் சத்தமிட்டு சொன்னேன் " அடுத்தப் பாட்டு போடுறதுக்குள்ளே எல்லாரும் சீக்கிரம கிளம்பிடுங்க.. எப்பா தாங்க முடியலடா சாமி! " என்றேன்.

"அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்த்து"

மக்களின் மனோபாவத்தை புரிந்து கொள்ள முடிந்தது..

விக்ரமன் இந்த "சென்னைக் காதல் " மூலம் தனக்கு இருந்த பெயரை கெடுத்துக் கொண்டார் என்று நினைக்கிரேன்.

நம்ம "விமர்சக வித்தகர்" விழியன் இந்தப் படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டுகிறேன்.


பின்குறிப்பு1 : உங்களுக்கு பிடிக்காதவங்க யாராச்சும் இருந்தா அவங்களை இந்தப் படத்தை பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்க :))

பின்குறிப்பு2 : ஆனா !விழியன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் :))
-
--

ராமா!