PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, November 30, 2005

புன்னகை ரேகை!

ஜெயமே ஜெயம்- 9
கைரேகை பார்த்து திருப்தி அடைபவர்கள் பலரை நாம் அறிவோம். எத்துணை பேருக்கு புன்னகைரேகை பற்றி தெரியும்? அது பற்றி அறியாதவர்களுக்கு அறியச்செய்வதே இந்தவாரக் கட்டுரையின் முயற்சி.

"உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகள் அத்துணையையும் புன்னகை என்ற ஒரே மொழி பேசி விடும்" என்று ஒரு முதுமொழி உண்டு. புன்னகை என்பது பொன்னகையை விடவும் மேலானது.

பொன்னகை என்றதும் பெண்கள்தான் நினைவுக்கு வருவார்கள்.

இரண்டு பெண்களைக் கருத்தில் கொள்ளுங்கள்..

ஒருவள் அழகிய ஆடை ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டு முகத்தை உம்மணாம் மூஞ்சி என்பார்களே அதுபோல் 'உர்ர்ர்ர்' என்று வைத்துக்கொண்டு இருக்கிறாள்.

மற்றவள், எளிமையாக இருக்கிறாள் ஆபரணம் ஏதும் அணியவில்லை. ஆனால் புன்னகைத்த முகத்தோடு இருக்கிறாள்.

மேற்சொன்ன இருவரில் உங்களை யார் அதிகம் கவர்ந்திடுவார்கள். நிச்சயமாக இரண்டாமவள்தான்.

இந்த உதாரணம் கொடுக்கும் போது எனக்கு இன்னொரு சம்பவம் நினைவில் வருகிறது.

சோமு மிகக் குழப்பத்தில் வாடிய முகத்தோடு இருந்தான். "என்னப்பா பிரச்சனை?" என்றபடி வந்தான் அவனது நண்பன் கோமு. "நான் ஒரு பெரியபிரச்சனையில் இருக்கிறேன் நீதான் தீர்வு சொல்ல வேண்டும் , எனக்கு இரண்டு வரன்கள் வந்துள்ளது. ஒருத்தி என்னைவிட 10 வயது மூத்தவள், ஏராளமான சொத்துக்குச் சொந்தக்காரி, இரண்டாமவள் நல்ல அழகி; ஆனால் மிக ஏழ்மையில் இருப்பவள்" இவர்களில் நான் யாரை திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானிக்க முடியாமல் தவிக்கிறேன். என்றான்."

அதற்கு கோமு, " இதுவா பிரச்சனை! இரண்டாமவளையே மணந்து கொள், வாழ்க்கைக்கு இளமைதான் முக்கியம்! அது போனால் திரும்ப வராது" என்று தீர்வு சொன்னான்.

சோமு மிக மகிழ்ந்து தன் நண்பனைக் கட்டிப்பிடித்து தன் நன்றியைச் சொல்லிவிட்டு புறப்பட ஆரம்பித்தான்.

கோமு அவனை நிறுத்தி ,"சரி ..சரி.. அந்த முதல் பெண்ணின் முகவரியை என்னிடம் தந்துவிட்டுப் போ " என்றானாம் :-)

பணத்திற்காக பலர் பலவற்றை தொலைத்துவிட்டு வாழ்கிறார்கள். திருமண பந்தத்தில் கூட புன்னகை என்பது தொலைந்து போனால். அவ்வளவுதான் வாழ்க்கை நரகம்தான்.

சின்னக் குழந்தை கூட புன்னகையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளிடம் புன்னகைத்துப் பாருங்கள் அதுவும் அழகாக புன்னகைக்கும் . மாறாக நம் முகத்தை கடுகடுப்பாக வைத்து அதை முறைத்தால் வீல்..! என்று கத்த ஆரம்பித்து விடும்.

பிறந்து சில மாதங்களே ஆனக் குழந்தை கூட தன் கொள்ளைச் சிரிப்பில் நம்மை அள்ளிக்கொண்டு போகிறது.

வியாபாரயுக்தியில் முதன்மையான யுக்தியும் இந்தப் புன்னகைதான். புன்னகை எப்பேர்பட்ட மக்களையும் வசீகரிக்கும் சக்தி கொண்டது. மோனலிசா ஓவியத்தில் உள்ள சிறப்பில் அவளின் மெல்லிய புன்னகைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

குழந்தை கூட புன்னகையால் தன்னை மற்றவர் அள்ளி அணைத்துக்கொள்ளச் செய்கிறது என்றால், குழந்தைக்கு தெரிந்தது கூட நமக்கு தெரியவில்லை என்றா அர்த்தம். வறட்டு கௌரவம், தலைக்கனம் இவைதான் நம் புன்னகையைத் திருடிக் கொண்டு போய், கோபக் கோடுகள் முகத்தில் நிரந்தரமாக பதிய ஆரம்பித்து, விரைவில் கிழத்தன்மையை நம் முகம் பெற்று விடுகிறது.

Image hosted by Photobucket.com

மருத்துவ ஆய்வுப்படி பார்த்தால் புன்னகைக்க 4 தசைகள் போதுமானது. நமது முகத்தை சிடுமூஞ்சித்தனமாய் வைத்துக்கொள்ள 64 தசைகள் தேவைப்படுகிறது.

எளிமையானதை விட்டு விட்டு நம்மில் பலர் 64 தசைகளை கஷ்டப்பட வைத்து முறைப்பதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு புன்னகைதான் வருகிறது.

புன்னகை, சிரிப்பு இவையெல்லாம் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள். நயவஞ்சகச் சிரிப்பு மற்றும் ஆணவச் சிரிப்பை பற்றி இங்கு யான் பேச வரவில்லை. அது பசுத்தோல் போற்றிய புலி போன்றது.

'சிரிப்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள்' என்று கேட்டுக்கொள்ளும் அளவிற்கு, நாம் வளரவளர, நாள் ஒன்றிற்கு நாம் சிரிக்கும் அளவு குறைந்து கொண்டே போகிறது. குழந்தையாக இருக்கும் போது நாள் ஒன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட தடவை சிரித்த நாம் வளர்ந்த நிலையில் நாளுக்கு 10 , 15 தடவையாவது சிரிப்பது என்பது அருகி விட்டது.

"Laughing Therapy" என்ற பெயரில் பல பெருநகரங்களின் பூங்காக்களில் காலைநேரத்தில் சில அன்பர்கள் வாய்விட்டு சிரிப்பதை ஒரு பயிற்சிபோல் செய்வதை பார்த்திருப்பீர்கள்.காரணம், சிரிப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தலைசிறந்த பேச்சாளர்களின் பேச்சை உற்று நோக்குங்கள் 10 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது மக்களைச் சிரிக்க வைத்தபடி பேசுவார்கள். அந்தத் திறமைதான் அவர்களை தலைசிறந்த பேச்சாளர் ஆக்குகிறது. காமெடி நடிகர்களின் சேவை குறிப்பிடத்தக்கது. அது, காம நெடியாக இல்லாத பட்சத்தில் சிறப்பானது என்றே சொல்லலாம்.

ஒருவர் இப்படித்தான், "சிரிப்போம்; சிந்திப்போம்" என்ற தலைப்பில் நூல் வெளியீடு செய்தார். அதற்கு பின்னூட்டம் கேட்டபோது ஒருவர் சொன்னார், "உங்கள் நூல் முதலில் நன்கு சிரிக்கும்படியாக இருந்தது , பின்னர் ஏன்டா சிரித்தோம்? என்று சிந்திக்கும்படியாக இருந்தது" என்று சொல்லிவிட்டார். (உங்கள் பின்னூட்டம் அப்படி இருக்காது என்று நம்புகிறேன் :))

மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் அழகாய் இருக்கிறார்கள். எதை அழகு என்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள். ஆக, புன்னகை ரேகை நம் முகத்தில் ஓடுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுவோம். அது வாழ்வின் வெற்றிக்கு ஒரு அருமையான யுக்தி ஆகும்.

புன்னகை செய்ய என்ன வேண்டும்? முதலில் நல்ல கலாரசனை அதாவது ரசிப்புத்தன்மை வேண்டும்; மற்றவர்களை நேசிக்கும் மற்றும் பாராட்டும் குணம் வேண்டும். பிறர் மனம் நோகாதபடி பேசும் தன்மை வேண்டும்.

"ஹியுமர் கிளப்" ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தது. "இங்கே 100 சிறப்பான ஜோக்குகள் சொல்லப்படும் யார் 100 ஜோக்குகளுக்கும் சிரிக்காமல் இருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர்" என்று அறிவித்தனர். சொல்லப் பட்ட ஒவ்வொரு ஜோக்கும் மிகச் சிறப்பானவை. யாராலும் சிரிக்காமல் இருக்கவே முடியாது. சிலர் 15 ஜோக்குகளுக்கு தாக்குப் பிடித்தனர். சிலர் 25 ஜோக்குகளுக்கு தாக்குப்பிடித்தனர். யாராலும் வெற்றி பெற முடியாத சூழல். ஆனால், இறுதியாக ஒரு போட்டியாளர் வந்தார். மனுசன் அசரவே இல்லை. காலஞ்சென்ற முன்னாள் பிரதமரிடம் இவர் வரம் வாங்கியுள்ளாரோ என்னவோ? சபையினருக்கோ பெருத்த ஆச்சரியம். 95 வது ஜோக் சொல்லப்பட்டது. 98 , 99 வது ஜோக் சொல்லப்பட்டது..ஊஹூம் ..அவரை சிரிக்க வைக்கவே முடியவில்லை. மக்கள் ஆரவாரம் செய்தனர். இவர்தான் வெற்றி பெறப்போகிறார் என்பதால் பலத்த கைத்தட்டுகள் எழும்பின.

100 வது ஜோக் சொல்ல ஆரம்பிக்கும் வேளையில் இந்த போட்டியாளர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். சபைக்கோ ஒன்றும் புரியவில்லை. போட்டியாளனின் நண்பர்கள் " இன்னும் ஒரு ஜோக்கிற்கு சிரிக்காமல் இருந்திருந்தால் கின்னஸ் ரிக்கார்டு படைத்திருப்பாயே " என்று கடிந்து கொண்டனர். இத்தனை ஜோக்குகளுக்கு தாக்குப் பிடித்தவன் கடைசி ஜோக் சொல்லும் முன்பாகவே சிரித்துவிட்டதின் காரணத்தை அரங்கம் கேட்டது.

அதற்கு அவன், "முதல் ஜோக்கின் அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிந்தது" என்றானே பார்க்கலாம். :)

இப்படிப் பட்டவர்களை நாம் என்னதான் செய்யமுடியும்? சொல்லுங்கள்! ஆக, நல்ல ரசிப்புத்தன்மை அவசியம். அதற்காக ஜோக் சொல்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு தரங்கெட்ட ஜோக்குகளையும், அறுவை ஜோக்குகளையும் சொல்லி உங்களைக் கண்டாலே மற்றவர்கள் ஓட்டம் பிடிக்கும்படி செய்து விடக் கூடாது.

முதலில் புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள். உதட்டளவில் சிரிக்காமல் உள்ளப்பூர்வமாய் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். நண்பர்களை வசீகரிக்கும் சக்தி இந்த புன்னகைக்கு அதிகம் உண்டு. புன்னகைரேகை உங்கள் முகத்தில் படரட்டும், புது உற்சாகம் பிறக்கட்டும் என்று வாழ்த்தி இந்தவாரச் செய்தியை நிறைவுசெய்கிறேன்.

ஜெயம் வ(ள)ரும்!

Wednesday, November 09, 2005

பணம்தான் வெற்றியா?

ஜெயமே ஜெயம் - 8
சமீபத்தில் எனது கல்லூரித் தோழர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு Get-together - க்காக ஏற்பாடு செய்தோம். அனைவருக்கும் குடும்பத்தோடு வர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 6 வருடங்களுக்குப் பின் சந்திக்கும் சந்திப்பு. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பெரிய உணவகத்தில் சந்திப்பிற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அலுவலகம் விட்டுக் கிளம்பி அவசர அவசரமாக அந்த சந்திப்பிற்கு கிளம்பினேன். முகத்தில் பரவசம், உற்சாகம், பல சிந்தனைகள். அந்த உணவகத்தின் புல்வெளியில் வட்டமாக இருக்கைகள் போட்டு நண்பர்கள் அமர்ந்து இருந்தனர். ஒவ்வொருவராக முன் வந்து தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

மனதிலோ மிக்க மகிழ்ச்சி, யாரிடம் பேசுவது என்றே தெரியவில்லை. அனைத்தும் கல்லூரி முகங்கள். 6 வருடத்திற்கு பின்னான சந்திப்பு . எப்படி இருக்கும் என்று மனதில் கற்பித்து கொள்ளுங்கள். விவேக் பாணியில் ஹாய்! ஹாய்! ஹாய்! என்றபடி ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தேன். சும்மா சொல்லக்கூடாது நண்பர்கள் பெரிய பெரிய MNC ல் நன்றாகவே செட்டில் ஆகியிருந்தார்கள். கேலியும் கிண்டலுமாக பழைய கல்லூரி வாழ்க்கைபோல் அந்தக் கூட்டம் சென்று கொண்டு இருந்தது. ஆனால், ஒவ்வொருவரும் பேசுகையில் அவர்களது பேச்சில் முதிர்ச்சி/அனுபவம் தெரிந்தது.

ஆனால்! நாங்கள் எதிர்பார்த்த சிலர் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. சிலர் உண்மையான தவிர்க்க முடியா காரணங்களால் வரவில்லை. சிலர் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே வரவில்லை. அந்த காரணத்தை அறிய முற்படுகையில்தான் மேற்சொன்ன தலைப்பு மனதில் பட்டது.

நம்மில் பலருக்கு பொறாமை உணர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மை என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சின்ன சின்ன விசயங்களில் இருந்து சிலவற்றை பார்ப்போம்.

உலகில் தினமும் யாராவது ஒருத்தருக்கு லாட்டரியில் கோடி கோடியாக பரிசு கிடைக்கிறது. அதைச் செய்தியாகப் பார்க்கும் நம்மவர்கள் "அவன் கொடுத்து வச்சவன்ப்பா, மச்சக்காரன்பா " என்பதோடு அந்த நிகழ்ச்சியை மறந்து போவார்கள். இதே பரிசு , பக்கத்து வீட்டுக்காரனுக்கோ அல்லது பங்காளிக்கோ விழட்டும், அவ்வளவுதான் , இவன் காதில் இருந்து புஸ்வானமே வந்துவிடும். கரித்துக் கொண்டே இருப்பான். இவனுக்கு தூக்கமே போய் விடும். ஏன் இப்படியொரு மன நிலை?

சிலர் இருக்கிறார்கள்.. தன்னைவிட தன் நண்பன் அதிகம் சம்பாதிக்கின்றான் என்றால். அவனை தவிர்க்க முயலுவார்கள். ஏதோ விரோதி போல் பார்ப்பார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள் ..தான் தன் நண்பனை விட அதிகம் சம்பாதிக்கிறேன் என்பதை தங்கள் டாம்பீகம் மூலம் பறைசாற்றிக் கொண்டு இருப்பார்கள்.

பொது நிகழ்ச்சிக்கோ, திருமணம் போன்ற வைபவங்களுக்கோ ஏன்? கோவிலுக்குச் செல்லும் போது கூட.... பட்டாடை மற்றும் கோட்டு சகிதம் வருபவர்களுக்கு ஒரு மரியாதையும் , சாதாரண உடையில் செல்பவனுக்கு ஒரு மரியாதையும் கிடைக்கிறது. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதை எல்லாம் காற்றில் பறக்க விடும் வகையில் இதில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம் என்று பிரிவுகள் வேறு வைத்திருக்கிறார்கள். நான் விளையாட்டாய் சொல்கையில் "இந்த உலகில் மனுசனுக்கு மதிப்பில்லைப்பா, அவனோட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்க்குதான் அதாவது அவனோட உடை, நகை, கார், வீடு, பணம் இதற்குத்தான் மரியாதை" என்பேன்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லைதான். ஏன் மனிதன் இப்படி பணத்திற்கு ஆளாய்ப் பறக்கிறான்? எல்லாம் ஆசை மற்றும் தேவைகள்தான் காரணம். அப்படியானால் பணம் என்பதுதான் வெற்றியா? என்ற கேள்வி எழும்? பணம் வெற்றியில் ஒரு குறிப்பிட்ட பங்கு வகிக்கிறதே தவிர, முழுதும் அதுவே காரணம் இல்லை.

ஆயிரம் சம்பாதிப்பவனுக்கு நூறில் கடன்; லட்சம் சம்பாதிப்பவனுக்கு பல ஆயிரங்களில் கடன், கோடி சம்பாதிப்பவனுக்கோ பல இலட்சங்களில் கடன்!

"ஏன்? நாடே கடன் வாங்குகிறது; நான் வாங்கினால் என்ன?" என்று வேதாந்தம் பேசுபவர்களும் உண்டு. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதில் கடன் இல்லாமல் இருப்பவன்தானே மிகப் பெரிய கோடீஸ்வரன். பல கோடிகளுக்கும் அதிபதியாய் இருப்பவர்களில் பலர் தூக்கமின்மையால் அவதியுற்று மாத்திரைப் போட்டு தூங்குகிறார்கள். இது இவர்களுக்கு உண்மையான வெற்றியா?

அன்பர்களே நான் பணம் பண்ணுவதை தவறு என்று சொல்லவே மாட்டேன். நிம்மதியான முறையில் பணம் பண்ணுகிறோமா என்பதுதான் முக்கியம். அந்த பணத்தை எப்படி சேமிக்கிறோம்? எப்படி செலவு செய்கிறோம் என்பதிலும் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.

நம்மை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். வெளியில் இருந்து ஒருவர் வந்து இது சரி, இது தப்பு என்று நமக்கு எதையும் சுட்டிக் காட்டத் தேவையில்லை. நாம் செய்யும் செயல் சரியா? தவறா? என்பதை நம் மனமே நமக்கு உணர்த்தும். அந்த உணர்த்தும் வேளைதனில் , மனதை உதாசீனப்படுத்தாமல் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்.

நமக்கு சொந்தமில்லாத நம் உழைப்பினால் பெறப்படாத எந்த செல்வமும் நிலைத்து நிற்பது இல்லை. இதை ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தில் கண்டிருப்பார்கள்.

இங்கே "லஞ்சம்" வாங்குதல் மற்றும் கொடுத்தல் பற்றி கொஞ்சம் அலசுவோம். இந்த இரண்டு காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் இன்பம் நிலைத்து இருப்பதில்லை.

சில அரசாங்கத்துறையில்(பெயர் குறிப்பிட விரும்ப வில்லை) ஏகப்பட்ட லஞ்ச ஊழல்கள் இருப்பதை நாம் அறிவோம். அவர்களது வாழ்க்கையின் பின் பகுதியை விசாரித்துப் பார்த்தால் மிக மோசமாக இருக்கும். சிலருக்கு மணவாழ்க்கை படு பாதாளமாக அமைந்திருக்கும். சிலரோ தீரா வியாதிக்காரர்களாக டாக்டரிடம் தினமும் ஓடிக்கொண்டு இருப்பார்கள். சிலரது குழந்தைகள் தவறான பாதைகளில் சென்று இவருக்கு அவப்பெயரை உண்டாக்கிடுவர். சிலருக்கு மனோவியாதி பீடித்திருக்கும். இன்னும் பல சொல்லலாம். அந்நியன் படத்தில் கொடுக்கப்படும் தண்டனை போல் கடுமையாகத்தான் இவர்கள் வாழ்க்கைச் சென்று கொண்டு இருக்கும். இதெல்லாம் தவறான வழியில் வந்த செல்வம் தரும் தண்டனைதான்.

இன்பம் துன்பம் அனைவருக்கும் பொது எனினும், இறைவன் இப்படிப்பட்டோர்க்கு பல பிரச்சனைகளின் மூலம் நல்ல பாடம் புகட்டுகிறான். புரிந்தவர்கள் தவறு செய்வதில் இருந்து விழித்துக் கொள்கிறார்கள். புரியாதவர்கள் அதிலேயே மாண்டும் போகிறார்கள்.

ஆக, பணம் என்பதில் நேர்மை, நியாயம் என்பது இருக்கும் பட்சத்தில்தான் அது உண்மையான மகிழ்ச்சியாய் இருக்கும். உண்மையான வெற்றியாய் இருக்கும். இல்லை எனில் தொல்லைதான்.
Image hosted by Photobucket.com
ஜெயமே ஜெயம் தொடரும்..