PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Wednesday, March 29, 2006

21 நாட்கள்!

ஜெயமே ஜெயம் - 14

வருடத்திற்கு 365 நாட்கள்! இதில் தொடர்ந்து 21 நாட்களை நீங்கள் ஒதுக்கி வைக்கத் தயாரா?

எனக்காக இல்லை...உங்களுக்காகத்தான்!

உங்களை விட்டு ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் குணத்தை ஒழித்துக் கட்ட, புதிதாய் ஒரு நல்ல விசயத்தை பழக்கமாக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை திண்ணமாக்க உங்களுக்கு விருப்பம்தானே ?

ம்ம்ம்.. என்ன மௌனம் ?

சொல்லுங்கள் ...உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள ஆசையில்லையா...?

கருதிய காரியம் கைகூட இறுதி வரை உறுதியாய் இருக்க வேண்டும் அல்லவா!

நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ஒருசில வழிகளை நம் அன்றாட வாழ்வின் பழக்கமாக்கிட வேண்டாமா!

அதற்குத்தான் 21 நாட்களை ஒதுக்கச் சொல்கிறேன்..

அதற்கு முன்னால் சில விசயங்களை அலசுவோம் :)

வீட்டில் திடீரென்று இரவு 9 மணி அளவில் மின்சாரம் ரத்தாகி விடுகிறது ? என்ன செய்வீர்கள்?

பதில்கள்...

1. மின்சாரத்துறையை திட்டோ திட்டென்று திட்டுவேன் :)
2. அய்யோ பார்க்க வேண்டிய டி.வி சீரியல் போய்ச்சுதே என்று அலறுவேன் :)
3. பக்கத்து வீட்டாரிடம் கதைக்கப் போயிடுவேன் :)

இப்படியெல்லாம் செய்யாமல் உடனே தீப்பெட்டி/மெழுகுவர்த்தி தேடிப் போவீங்க.. :)

அப்படித்தானே!

உங்களைச் சொல்லி அதை எடுக்க சொன்னோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. மின்சாரம் வந்த பின்னர் பார்த்தா வீடே ரணகளப்பட்டு இருக்கும். அதற்குள் போன மின்சாரம் திரும்பவும் வந்திருக்கும் :)

ஆனா! நம்ம வீட்டில் இருக்கிற ஹோம் மினிஸ்டர் அந்த கும்மிருட்டிலேயும் தட்டு தடுமாறி விழாமல் அலேக்கா அடுப்பறை போய் தீப்பெட்டியை கொண்டு வந்து ஒரு பத்து பத்த வச்சிடுவாங்க(மெழுகு வர்த்தியைத்தான்)!

அது எப்படி சார் முடியுது? இருட்டுல கூட அவங்களுக்கு கண்ணு தெரியுது..

ஆங்க்!..அங்கதானே விசயமே இருக்குது..

சரி, ஒரு டெக்னிகல் உதாராணம் சொல்றேன்.

உங்களோட மின்னஞ்சல் அல்லது கணிணி யோட பாஸ்வேர்டை இப்போ மாற்றுங்க. உங்க Screen Saver ருக்கான நேரம் சில மணித்துளியாக இருக்கட்டும். இருக்கையை விட்டு எழுந்து சென்று விடுங்கள். இப்போது கணிணி உள் நுழைய முயற்சியுங்கள்.

பாஸ்வேர்ட் தட்டச்ச தடுமாறுகிறீர்களா :)

இதை நீங்கள் கண்டிப்பாக அனுபவித்திருக்க வேண்டும்.. ஏன் இந்த தடுமாற்றம்.. உம் யோசனை பண்ணுங்க..

சரி ஒரு வழக்கமான உதாரணம் பார்ப்போம்..

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கும் போது ஊருக்கு பெரிய சர்க்கஸே நடத்திக் காட்டியிருப்போம்.

நமக்கு கற்றுத் தந்தவர் படு பீலா விட்டுருப்பாரு.. அங்கே பார்க்காதே இங்கே பார்க்காதே நேரா பாரு, கீழே பார்க்காதே, மேலே பார்க்காதே, இடுப்பை ஒடிக்காதே இன்னும் ஏகப்பட்ட கட்டளைகள்..

கொஞ்சம் நினைச்சிப் பாருங்க இதெல்லாம் செய்யாம நம்மளால எதைத்தான் ஓட்ட முடியும் ?

மோட்டார் வாகனம் பழகும் போதும் இதே கதைதான். ஆனா இப்போ பாருங்க , சென்னை போன்ற பெரிய நகரங்களில் விட்டா கூட நாம வண்டியை சும்மா தில்லா ஓட்டிட்டு போறோம் இல்லையா?.

எல்லாம் ஆட்டோமெட்டிக கண்ட்ரோல் போல நடக்குது இல்லையா?

ஆரம்பத்தில் சிரமமாய் இருந்த விசயம் பழக்கத்தில் எளிதாய் ஆகிவிடுகிறது. தினசரி நாம் ஒரு செயலை தொடர்ந்து செய்யும் போது அது நம் வழக்கமாகி பின் பழக்கமாகி அதுவே நம் குணமாகி விடுகிறது.

குணம் என்பது நமது அன்றாடப் பழக்கத்தின் பிரதிபலிப்பே! நல்ல குணம் படைத்தவன் என்ற பெயர், நமது பழக்கத்தினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்? நம்மிடையே இருக்கும் கெட்டப் பழக்கங்களை விட வேண்டும்; நல்ல பழக்கங்களை பழகுதல் வேண்டும்.

அதற்காகத்தான் உங்களிடம் இருந்து 21 நாட்களை ஒதுக்கிவைக்க முடியுமா என்று கேட்டேன். "அது என்ன 21 நாள் ?" என்று நீங்கள் கேட்பீர்கள்.

எல்லாம் நம்ம முன்னோர்கள் சொன்ன விசயம்தான். 41 நாள் விரதம், 11 நாள் விரதம், 30 நாள் நோன்பு இதெல்லாம் நமக்கு பழக்கமானதுதானே. அதே போன்றுதான் 21 நாட்களும்.

நம்ம பெரியோர்கள் சொல்ற விசயத்தை காதுல போட்டுக்க மாட்டோம். ஆனா அதே விசயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானால், ஆஹா ஓஹோன்னு கொண்டாடுவோம்(என்ன பண்ணுறது நம்ம பழக்கம் அப்படி :) )

அதாவது ஒரு பழக்கத்தை ஒருவன் கைவிட/கைக்கொள்ள வேண்டும் என்றால் 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் போதும் என்று உலகப்புகழ் ஹார்வர்ட் பலகலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் வெளியிட்டு இருக்கிறது.

ஆங்கில சுயமுன்னேற்ற அறிஞர்கள் இதை " 21 Days Habit" என்பார்கள்.

முதலில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், எந்த பழக்கத்தையெல்லாம் விட வேண்டும் என்று பட்டியல் இடுங்கள்!

1. புகை
2. மது
3. மாது
4. சூது
5. புறங்கூறல்
6. அச்சம்
7. மேடை நடுக்கம்
..
..
..
இன்னும் பல...


எந்த விசயத்தை பழக்கமாக்கிட வேண்டும்

1. அதிகாலை எழுவது
2. புத்தக வாசிப்பு
3. உடற்பயிற்சி
4. மொழிப்பயிற்சி
5. யோகா
6. ஆன்மீகம்
7. விளையாட்டு
..
..
..
இன்னும் பல.

பட்டியலைத் தயாரித்துக் கொண்டபின்,

உங்கள் இலக்கிற்கு உறுதுணையாய் இருக்கும் பழக்கத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுங்கள்.

உதாரணமாக "அதிகாலை எழுதல்" என்பதைக் கொண்டால். அதை 21 நாட்கள் வலுக்கட்டாயமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும்(கடிகாரத்தின் உதவியோடு). 21 நாட்கள் நீங்கள் தொடர்ந்து செய்து விட்டால் 22 ஆம் நாள் நீங்கள் தானாகவே அதிகாலையில் கடிகார அழைப்பு இன்றி எழுந்து விடுவீர்கள். கடிகாரமே உங்களிடம் கேட்டுக் கொண்டுதான் மணி எழுப்பும்!

உங்களுக்கு அந்த திறன் 21 நாட்களுக்கு முன்னதாகக் கூட வரலாம். அது அவரவர் கட்டுப்பாட்டை/திறமையைப் பொறுத்தது.

இம்முறையில் நாம் ஒரு பழக்கத்தை நம் வழக்கம் ஆக்கிக் கொள்ள முடியும். இதை நீங்கள் பரிசோதித்துப் பார்க்கும் போது நன்கு அறிவீர்கள்.

முதல் வாரத்தில் கண்டிப்பாய் ஒரு தடங்கல் வரும். அதையும் மீறி நீங்கள் செயல் பட வேண்டும். அதை வெற்றி கண்டால் இரண்டாவது வாரத்தில் தடங்கல் வரும். அதையும் தாண்டி, 3 வது வாரம் வருகின்ற தடங்கலையும் தாண்டிவிட்டால் நீங்கள் கைக்கொள்ள நினைத்த பழக்கம், உங்கள் குணம் ஆகி இருக்கும்.

ஒரு முக்கிய விதி.. 21 நாட்களில் தடங்கல் ஏற்பட்டு விட்டால் நீங்கள் மறுபடியும் ஒன்றில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

எப்படி இருக்கிறது இந்த விளையாட்டு ? என்ன நீங்கள் விளையாடத் தயாரா?

நல்ல பழக்க வழக்கங்களே ஒருவனின் நிலையான வெற்றியை தீர்மானிக்கிறது. குணவான் ஆக்கிறது. சமுதாயதில் "சொக்க தங்கம்" என்ற பாராட்டைப் பெறச் செய்கிறது. மனதில் மகிழ்ச்சியைப் பெருக்குகிறது.

ஆகவேதான் இந்த 21 நாட்கள் பற்றி எழுதினேன்.

எனது சொந்த அனுபவத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஊர்வன பறப்பன, நடப்பன என்று ஒன்றும் விடாமல் தின்று தீர்ப்பவன் நான்(மாமிசம் சாப்பிடுவதை நான் ஒரு குறையாய் சொல்லவரவில்லை. அதை குறை கூறுவது எனது நோக்கமும் அல்ல).

என் வாழ்வில் குருநாதர் என்று ஒருவர் வந்த பின் என் பாதைகள்/பார்வைகள் மாறியது. (8 வருடங்களுக்கு முன்) அனுமன் ஜெயந்திக்காக ஒரு நாற்பது நாள் விரதம் இருந்தேன். சற்றுக் கடுமையான விரதம்தான். டீ, காபி தவிர்த்தல், காலில் செருப்பின்றி இருத்தல், காவி உடை தரித்தல், வெறுந்தரையில் படுத்தல், இரு வேலை குளித்தல், அதிகாலையில் எழல், மாமிசம் உண்ணாதிருத்தல், இலைச்சோறு சாப்பிடுதல், டி.வி நிகழ்ச்சி, சினிமா செய்திகள் பாராதிருத்தல் என்று கடுமையான விரதம்தான்.

விரத நிறைவுநாள் அனுமன் ஜெயந்தி! மகிழ்ச்சியான தரிசனம் அமைந்தது.
மறுநாள் என் அன்னை எனக்கு காபி கொண்டு வந்து தந்த போது.. "வேண்டாம்மா பால் போதும் " என்றேன்.

கருவாட்டு குழம்பு என்றால் சாப்பாட்டு ராமனாகி விடும் யான், ஞாயிறன்று அவர்கள் கருவாடு சமைத்த போது அதை உண்ண வேண்டும் என்ற எண்ணமே எழுவில்லை. (பின் எனக்கென்று தனியே ரசம் வைத்தார்கள் அது வேறு கதை). அன்று மாறியவன் இன்று வரை அப்படியே இருக்கிறேன். விரத்தில் நான் கடைப்பிடித்த ஒருசில விசயங்கள் தவிர உண்ணும் விசயத்தில் எனக்கு ஏற்பட்ட மாற்றம் இந்த "21 நாட்கள்" தலைப்பிற்கு நல்ல உதாரணமாய் பட்டதால் உரிமையோடு இங்கு சொன்னேன்.

இது எப்படி சாத்தியம் என்றால், எந்த ஒரு விசயத்தை தொடர்ந்து செய்கிறோமோ அது நமது ஆழ்மனதில் பதிந்து பின்னர் தானே செயல்பட ஆரம்பிக்கிறது. நமது கட்டளை இன்றி தானாகவே செயல்படுகிறது.

உங்கள் அலுவலகத்திற்கு செல்ல இரண்டுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தாலும் குறிப்பிட்ட வழியிலேயேதானே தொடர்ந்து செல்கிறீர்கள்.
அந்த வழியை விடுத்து மாற்றுப்பாதையில் செல்லும் போது நீங்கள் வித்தியாசமாய் உணருவீர்கள். வழக்கமான வழியில் செல்லும் போது இலகுவாக இருப்பதை அறிவீர்கள். இதற்கெல்லாம் அடிப்படை நமது ஆழ்மனமே!

ஆழ்மனம் பற்றி ஏற்கனவே "ஜெயமே ஜெயத்தில் " எழுதிவிட்டேன்.

நாம் இங்கே சொல்ல வந்தது 21 நாட்கள் பற்றியது.

என்ன அன்பர்களே! உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் இலட்சியத்திற்கு உதவிடச் செய்யும் பண்பை வளர்க்க இப்போது நீங்கள் 21 நாட்களை ஒதுக்கி வைக்க சம்மதம்தானே!

ஜெயம் வ(ள)ரும் ..

Friday, March 24, 2006

சக்தி கொடு தாயே!

Image hosting by Photobucket
முகம் காணில் சிரித்து
முதுகினில் குத்தும் - இது
போட்டி நிறை உலகமப்பா
பொறாமைகள் ஜாஸ்தியப்பா!

வீட்டினிலே நீ கிடந்தால்
வெற்றி காண முடியாதப்பா - தமிழ்ப்
பாட்டினிலே சொல்கின்றேன்
இலட்சியம் நீ கொள்ளப்பா!

கூட்டினிலே அடைபட்ட
கிளியாய் தான் இருக்காதே
கூவமாய் மனதில் எண்ணம்
கூடிவிடும் பின் வருந்தாதே!

சல்லடை என்ன செய்யும்
சருகுகளை தேக்கி வைக்கும்
அறமான முறமோ அவற்றை
எல்லாம் வீசி விடும்.

முறமாய் இருந் திடுவாய்
இடர்களை களைந்திடுவாய்!
வரமாய் இறைவன் தந்த- உன்
வாலிபத்தை பயன் செய்வாய்!

காமத்தில் வாழ்ந்து விட்டால்
கடைந்தேறல் மிகக் கடினம்
யோகத்தைப் பெற வேண்டும்
யோசிப்பாய் என் கருத்தை.

காலத்தை அறிந்திட்டால்
காலனையும் வென்றிடலாம்
ஞானத்தை உணர்ந்திட்டால்
ஞாலமே உன்னைப் போற்றும்!

வீரம் விளைந்த மண்ணில்
வேந்தனே நீ பிறந்தாய் - உன்
கோலம் உணர்ந்து விடு
கோமானாய் ஆகி விடு.

விரல்கள் பத்தும் உன்
வெற்றிக்கு மூலதனம் எனும்
குரல்கள் ஒலிக்கட்டும்
குவலயம் உனக்கடிமை யாகும்!

சூலம் பிடித்த சக்தி
ஓம் காளி! ஜெய் காளி!
வீரம் தந்து விடு
வெற்றி பெற சக்தி கொடு!

Thursday, March 23, 2006

66- ம் குறள்

தெள்ளு தமிழ் வள்ளுவனின்
66 - ம் குறளின் பொருள்
இன்றுதான் புரிகிறது- ஆம்!
என் குட்டித் தேவதையின்
செல்லச் சிணுங் களை
செல்பேசி வழி கேட்டேன்!