PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Thursday, October 15, 2009

தீபாவளி வந்திருச்சு !



"அப்பா கம்பி மத்தாப்பு வாங்கித் தாப்பா .." என்று அனுசுயா டிவியில் வரும் தீபாவளி விளம்பரம் பார்த்து கேட்கவும் பட்டாசு வாங்க கிளம்பினேன்.

"வெடிக்கும் வெடிகள் எதுவும் வாங்கக் கூடாது " என்று அனுசுயா அம்மா கண்டிஷன் போட....

"ஏம்ப்பா ..வெடி வெடிக்கலைன்னா அவங்களுக்கு வியாபாரமே நடக்காதுப்பா ... வாங்குற வெடியை அப்போ ஃப்ரிட்ஜ் ல்ல தான் வைக்கணும் அப்போதான் அது வெடிக்காத வெடியாய் இருக்கும்" என்று யான் கலாய்க்க, தேனாம்பேட்டை யில் இருக்கும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் பண்டகசாலையில் ( TUCS ) சிவகாசி விலைக்கே ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் - ன் பட்டாசுக்கள் கிடைக்கும் என்பதால் (கூட்டத்தை தவிர்க்க) இன்றே வாங்கி விடுவோம் என்று கடந்த வெள்ளி இரவு 8.30 மணிக்கு சென்றேன். (TUCS த்தான் நமது நாட்டின் முதல் கூட்டுறவு பண்டக சாலை என்பது ஒரு அரிய செய்தி. கி.பி 1904 முதல் செயல்பட்டு வருகிறது.)

அங்கே கூட்டம் அவ்வளவாக இல்லை .. பட்டாசுக் கடைக்குள் நுழையும் போதே சின்ன பயமும் வந்து விடுகிறது.. சின்ன வயதில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் புஸ்வானம் வைக்கும் போது அது பூமாரி பொழியாமல் வெடித்து விட்டது. கடவுள் கிருபையால் என் கண்கள் தப்பியது ...கைமட்டும் பெரும் காயத்துக்கு உள்ளானது,...இன்னமும் அந்த தழும்பு இருக்கிறது. கடையில் மொத்த பட்டாசுகளை பார்த்ததும் வெடித்தால் என்னாகும் என்ற தப்பான கற்பனையால் அந்த பயம் வந்திருக்கக் கூடும்.
அது சரி விசயத்திற்கு வாருங்கள்...பழ வியாபாரிகள் பழத்தை அழகாய் அடுக்கி வைப்பது போல் , கரியாகப்போகும் காசுக்கள் கலர் கலரான பொட்டலங்களில் கண்கவர் அழகாய் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

உள்ளே நுழைந்து விலைப்பட்டியல் கேட்டேன்.. A4 அளவில் பக்க புத்தகத்தை கையில் தந்தார்கள்.. படித்து விட்டு திரும்பக் கொடுக்கணுமா? என்று கேட்டேன் ..இல்லை! அது உங்களுக்குதான் ... அதில் என்னவேண்டும் என்று குறித்துவிட்டு தந்தால் விலைபோட்டுத் தருகிறோம் என்றார்கள். வார பத்திரிகைபோல் இருந்த அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்..:)

கிட்டத்தட்ட 900 க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகள் பட்டியலிடப்பட்டு இருந்தது. நமக்கு தேவையான கம்பி மத்தாப்பு, புஸ்வானம்( Flower Pots), தரைச்சக்கரம் இவற்றை மட்டும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி விட்டு பில் போட்டுக் கேட்டால்..அது கிட்ட தட்ட ரூ 500/- ஐ தாண்டி விட்டது. ' அம்மாடி இவ்வளோ ஆயிட்டா' ..என்று யோசித்தேன். உடனே அருகில் இருந்தவர் .."சார் ..இதையே நீங்க வெளியில வாங்கினீங்கன்னா ரூ 700/- தாண்டிடும் என்று சொல்லவும்...கொஞ்சம் சமாதானம் ஆனேன்.

எனது இடது புறம் , ஒரு பெரியவர் தன் மனைவியுடன் வந்து இருந்தார்...கிட்டதட்ட 65 வயதிருக்கும்.. தன் மணிபர்சை எடுத்து பணத்தை எண்ண ஆரம்பித்தார்... அத்தனையும் ரூ 500/- நோட்டுக்கள்.. எண்ணினார் எண்ணினார் எண்ணிக் கொண்டே இருந்தார்... என் கண்கள் அவர் கையில் வைத்திருந்த பில்லைப் பார்த்தது.. கிட்டதட்ட ரூ 27,000/- க்கான பில்லை கடைக்காரரிடம் நீட்டினார். நான் உறைந்தே போனேன்.. அடேங்கப்பா ..இவ்வளவு பெரிய தொகைக்கு கரிவாங்கிக்கிட்டு போறாரே என்று யோசித்தேன். அவரை கடைக்காரர்கள் விழுந்து விழுந்து கவனித்த விசயம் அதைவிட அலாதியானது.

முகத்தில் எந்தச் சலனமும் காண்பிக்காத அந்த பெரியவர் ...கடைகாரரிடம் 'மொத்தமாக பார்சல் செய்து என் வண்டியில் ஏற்றிவிடுங்கள்' என்று சொன்னார்..

நான் வாங்கியப் பட்டாசுக்கள் அப்படியே என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தது.

யோசித்துப் பார்த்தேன்... என் சின்ன வயதில் அதிகப்பட்சம் நான் வாங்கிவெடித்த பட்டாசுக்களின் மதிப்பு ரூ 100/-. தான் இருக்கும்... அதிலேயும் ...இரண்டு பாக்கெட் லட்சுமி வெடி, ஒரு துக்கடா சரம் மற்றும் ஒருபிஜிலி சரம் வாங்கி ...வீட்டிற்கு முன் வெடித்து...பக்கத்தில் வெடித்த பட்டாசு குப்பைகளை அப்படியே நம் வீட்டின் முன் கொண்டு வந்து நான்தான் நிறைய வெடிகள் வெடித்துள்ளேன் என்று எங்கள் காலனியில் ஒரு வீறுநடை மறுநாள் போடுவதுண்டு. அதிகாலையிலேயே எழுந்து பட்டாசு வெடித்த கையோடு அம்மா பூஜை அறையில் படையல் இட்டு வைத்திருக்கும் பதார்த்தங்களை பதம் பார்த்துவிட்டு, தீபாவளி மறுநாளில் வெடிக்காத , வெடித்த பட்டாசுக்களின் கந்தகப் பொடியை ஒரு காகிதத்தில் தட்டி அதை பற்ற வைத்தது (மிகவும் ஆபத்தான விளையாட்டு இது, மின்னல் போன்று அது மின்னும் அழகு மிக அழகாய் இருக்கும் ) என்றெல்லாம் .. அந்த நாட்களை நினைத்தால் அடக்க முடியாத சிரிப்பு வருகிறது. இந்த அனுபவம் கண்டிப்பாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

பட்டாசு வெடித்தல் சரியா ? தவறா என்ற பிரச்சனை எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். இந்தப் பிரச்சசனைக்கு எந்த நாட்டாமையாலும் தீர்ப்பு சொல்ல முடியாது , பெரிய பட்டிமன்றமே நடத்திடலாம் என்ற சிந்தனையோடு வீடு வந்து சேர்ந்தேன். தூங்கியபடி இருந்த அனுசுயா என் சத்தம்கேட்டு துள்ளி எழுந்து உற்சாகத்தோடு அப்போதே கம்பி மத்தாப்பை பற்ற வைக்க ஆயத்தம் ஆனாள் [ இன்னும் ரூ 500க்கு நான் பட்ஜெட் போடனும் போலும் :-( ]

அவள் கம்பி மத்தாப்பு போல் ஆனாள்! நான் புஸ்வானம் போல் ஆனேன்! :)

அளவுக்கு மீறினால் அமுதமே நஞ்சாகும் போது ...பட்டாசு மட்டும் எம்மாத்திரம்.?

ஆகவே! பக்குவமா பட்டாசு வாங்குங்க...பத்திரமா வெடியுங்கள்...!

எங்க வீட்டுக்குத் தீபாவளி வந்திருச்சு .. அப்போ நீங்க.....


"பாவமாக முகத்தை வைத்திருந்த
பையன் சிவகாசியைக் கேட்டேன்,
தம்பி பட்டாசு வெடிக்கலையா? என்று...
'இல்லை அண்ணா!
அதை செய்வது மட்டுமே என் வேலை' என்றான்
தன் கந்தகக் கண்களில் கண்ணீரோடு!"

- ராமா, நம்பிக்கை குழுமம்

1 Comments:

Post a Comment

<< Home