PositiveRAMA

என் எண்ணத்தில் உதித்தவற்றை இங்கே உதிர்த்துள்ளேன்!


நம்பிக்கை ஆண்டுவிழா போட்டி முடிவுகள்

Thursday, October 15, 2009

ஜெயமே ஜெயம் 17 - பாராட்டுவோம்!


நம்பிக்கையின் வெற்றிக்கு தங்கள் படைப்புக்களால், பின்னூட்டங்களால், வாசகர்களாய் தொடர்ந்து பங்கு ஆற்றி வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் முதலில் அடியேனின் மனம் திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஏங்குவது இந்த ஒரு விசயத்திற்காகவும்தான்.

பாராட்டுதல் என்பது ஒருவனை ஊக்கப்படுத்தும் உற்சாகப் பானம்.

ஒரு அளவுக்கு மேல் சென்றால் போதையில் ஆட்டம் கண்டவன் போல, ஆட்டம் காண வைத்து விடும்.

கோடி கோடியாக ஒருவனிடம் பணம் கொட்டிக் கிடந்தாலும் அவனை ஒரு நான்கு பேர் போற்றாவிட்டால் பைத்தியமாகி விடுவான். புகழுக்கு மயங்காதார் இந்த பூவுலகில் இல்லவே இல்லையே!

அதனால்தான் பல ஞானியர்கள் புகழைக் கண்டு அஞ்சி அஞ்சி ஓடி ஒளிகிறார்கள்.

பாராட்டு/ புகழ் என்பது அவ்வளவு பயங்கரமானதும் கூட .... :)

ஒவ்வொருவரும் மற்றவரின் அங்கீகாரத்திற்காக , பாராட்டுதலுக்காக ஏங்கி ஏங்கித் தவித்து இருக்கிறார்கள்.

நாம் என்னதான் பெரியச் செயல்களை சத்தமின்றி சாதித்தாலும் , மற்றவர் நம்மைப் பாராட்டும்போதுதான் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஊக்கமும் கொள்கிறோம், தன்னம்பிக்கை மேலும் பெறுகிறோம்.

நமக்கு கிடைக்கின்ற பாராட்டுதல் உண்மையான பாராட்டாக இருந்தால் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான்.

பாராட்டு நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நாம், ஏன் மற்றவர்களுக்கு இந்தப் பாராட்டைக் கொடுக்கவேண்டும் என்று இனி நினைக்கக் கூடாது!. ஒரு இரண்டு நாள் இந்த வழிமுறையை வலுக்கட்டாயம் ஆக்கிக் கொள்ளுங்கள். அப்புறம் என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து நோக்கி அடியேனுக்கு மடல் அனுப்புங்கள் . என்ன ? சரிதானே ...!

எச்சரிக்கை ! அடியேன் முன்பே சொன்னார்போல் நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் பாராட்டு உண்மையானதாக இருக்கவேண்டும். நடிகர் வடிவேல் நகைச்சுவை போல்... ஏட்டைப் பார்த்து கூர்க்கா என்பதும் , ஐ.ஜி யைப் பார்த்து ஏட்டா என்பதும் அடிவாங்கத்தான் வைக்கும். :) அதற்கு யான் பொறுப்பில்லை!

"ஆமாம் மச்சி ! அவனை நாக்கைப் பிடுங்குற மாதிரி நல்லா கேட்டேடா கேள்வி, சூப்பர்டா, நானா இருந்தா வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிருப்பேன் டா " என்ற ரீதியில் நம் பாராட்டு இருக்கும் எனில் பின்னாளில் நாமும் தான் கம்பி எண்ண வேண்டி வரும்.

ஆகவே, நம் மனதில் இருந்து உண்மையான நல்ல விசயங்களைப் (மட்டும்) பாராட்டுவோம்.

புகழ் என்பது தலைக்கு மேல் ஏறி கர்வம் கவ்விக் கொள்ளாத வரைக்கும் தப்பில்லைதான்.

மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது , உண்மையாய் இருந்தால் நன்றி சொல்லுவோம் .அவர்களைத் திருப்பிப் பாராட்டுவோம்.

" சார் உங்கள் உழைப்பை பார்த்து வியக்கிறேன்.. நீங்கள் உண்மையிலேயே சாதனையாளர்தான் " என்ற பாராட்டு உண்மையானதாக இருந்தால். உங்கள் சாதனையை தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள். " எல்லாம் தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களால்தான் இந்தச் சாதனைகள் சாதிக்க முடிகிறது " என்று சொல்லிப் பாருங்கள்... அவர் பின்னர் எப்படி மகிழ்ச்சி அடைகின்றார் என்று பாருங்களேன்?.

பணத்தை விட மனிதன் அதிகம் ஏங்குவது புகழுக்காகத்தான்.

இறைவனை நாம் வணங்கும் போது கூட அவன் புகழ் பாடியே வணங்குகிறோம். கொடுப்பது நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இயல்பாகவே நமக்கு அமைந்துவிட்டது. போற்றுதல் என்றுமே போற்றுதலுக்கு உரியதே!

விருப்பு வெறுப்பற்ற பாராட்டு என்பது மேலும் விரும்பத்தக்கது. அதற்கு நம்மை நாம் பழக்க வேண்டும்.

இங்கே எல்லோரும் அறிந்த ஒரு கதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புகழுக்கு மயங்காத அரசன் ஒருவன் அவன் நாட்டில் போட்டி ஒன்று அறிவித்தான். இதுதான் போட்டி " என்னை புகழ்ந்து நான் மகிழும்படி செய்பவர்களுக்கு 5000 தங்க காசுகள் என்று அறிவித்தான்.

ஆனால், போட்டி விதிமுறை சற்றுக் கடுமையாக இருந்தது .. மன்னனை மகிழ்விக்க எந்த முயற்சி வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆனால் , அவர் மகிழவில்லை என்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதுதான் போட்டியாளார்களைக் கொஞ்சம் அதிரவைத்தது.

போட்டி ஆரம்பித்தது. நாட்டின் கவிஞர்கள், புலவர்கள் , விகடகவிகள் முதல் நம் கலக்கப்போவது /அசத்தபோவது யாரு சாம்பியன்ஸ் வரை அனைவரும் வரிசையில் நின்றனர்.

மன்னனை மகிழச் செய்ய வந்த போட்டியாளர்கள் பாடினார்கள், ஆடினார்கள், நகைச்சுவையாகப் பேசினார்கள் , பலவாறு புகழ்ந்தார்கள், பல அரியப் பொருட்களைப் பரிசாகக் கொண்டு வந்தார்கள் மன்னனோ வி.ஜி.பி சிரிக்கா மனிதன் போல் உம்மென்று இருந்தான் . வெற்றி பெறமுடியாதவர்களுக்கு சிறைத்தண்டனை , அடி உதை என்று அனைத்தும் :) வழங்கினான். மன்னனின் கொட்டத்தை யாராலும் அடக்க முடியவில்லை. அவ்வூரில் இருந்த ஒரு புத்திசாலி சிறுவனும் மன்னனை மகிழ்ச்சியுற செய்யப் போகிறேன் என்று களத்தில் குதித்தான்.

போட்டி நடந்த படியே இருந்தது.. மன்னனை மகிழ்விக்க/ புகழ்ந்து பாட பலர் வரிசையில் காத்திருந்தபடி இருந்தனர். நம் சிறுவன் சேலம் மல்கோவா மாம்பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். அரசனை பார்க்கும் முறை இவனுக்கு வந்தது. அரசன் ஆச்சரியப்பட்டு போனான்.. "என்னடா ..இந்தப் பொடிப் பயல் என்னை மகிழ்விக்கப் போகிறானா? " என்று மனதில் ஏளனமாக நினைத்துக் கொண்டு ..".ம் ம் சொல் " என்று சிறுவனை நோக்கினார்.

சிறுவன் அரசனுக்கு வணக்கம் தெரிவித்து, " அரசே! உலகிலேயே மிகவும் விலைமதிக்க முடியாத மாம்பழத்தை நான் தங்களுக்காக எடுத்து வந்து இருக்கிறேன் " என்றான்.

அதற்கு அரசன், "ஏய் பொடியனே ...எல்லாவகை மாம்பழமும் எனக்குத் தெரியும் .. ".என்று கர்ஜித்து ..... தன் காவலாளிகளை அழைத்து..." இவன் சிறுவன் என்பதால் இவனுக்கு பெரிய தண்டனை கொடுக்க வேண்டாம்... அவன் கொண்டு வந்த மாம்பழத்தை அவன் வாயில் முழுமையாக திணித்து அவனை உண்ண வையுங்கள் " என்று கட்டளை இட்டான். சிறுவனை நினைத்து அவை பரிதாபப் பட்டது.

ஆனால்..நம் சிறுவனோ ... விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் :)

அவையோடு அரசனும் சேர்ந்து ஆச்சரியப்பட்டான்..."ஏய்ப் பொடியனே ...தண்டனை என்னவென்று தெரிந்துமா சிரிக்கிறாய்...உன்னை என்னச் செய்கிறேன் பார்..." என்றபடி தன் இருக்கை விட்டு எழுவும்... சிறுவன் அரசனை நோக்கி,

"மன்னாதி மன்னனே! அடியேனை மன்னிக்கவும். இந்த வரிசையில் தங்களைக் காண காத்திருக்கிறாரே அந்த முதியவர் , அவர் நிலைமையை யோசித்துப் பார்த்த போதுதான் அடக்கமுடியாத சிரிப்பு வந்து விட்டது என்றான்.

அரசனுக்கு சிறுவனின் செய்கை மிக்க ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. " என்னவென்று தெளிவாக சொல்" என்று அரசன் கேட்டான்.

" மன்னா! நான் கொண்டு வந்ததோ ஒரே ஒரு மாம்பழம்..அதை அப்படியே சாப்பிடும் படி தண்டனை கொடுத்து விட்டீர்கள்.. ஆனால் அந்த பல் இல்லாதப் பெரியவரோ மிகப்பெரிய பலாப் பழத்துடன் உங்களைக் காண வந்திருக்கிறார்.. அவருக்கு இதே மாதிரி தண்டனை கொடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன் ...என்று சொல்லி மீண்டும் சிரிக்க... அரசன் தன்னையும் மறந்து அவையினரோடு சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.

சிறுவன், " எங்கள் மன்னா! இந்த உலகில் புகழுக்கு மயங்காத ஒருவன் உண்டு என்றால் ..அது நீங்கள் மட்டும்தான் மன்னா!" என்றான்.

அரசனுக்கோ தலைக்கால் புரியவில்லை...தன்னை மகிழ்வித்த அந்தச் சிறுவனை வெகுவாகப் பாராட்டி பரிசுகள் வழங்கினான். பின் தன் தவறையும் உணர்ந்து அப்பாவி மக்களை விடுதலை செய்து மெய்யான புகழையும் பெற்றான்.

ஏற்கனவே தெரிந்த கதைதான் இருந்தாலும் ..இனி நீங்கள் இந்தக் கதையினை வித்தியாசமாகத் தங்கள் வாழ்க்கையோடு அணுகுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஆகவே , அன்பர்களே! பாராட்டுதல் என்ற கலையை நாம் கவனமாகக் கற்றுக் கொள்வோம்.. அடியேன் சொல்லவரும் பாராட்டுதல் என்பது துதிபாடுதல் அல்ல! அதாவது "சோப்பு போடுறது , கம்பி விடுறது , தொப்பி வைக்கிறது, சிங் ஜா போடுறது, நூல் விடுறது" என்றெல்லாம் சொல்வார்களே ... அந்தமாதிரியான விசயம் அல்ல.

பாராட்டுதல் என்பது இயல்பாகவே பாராட்டுவது ஆகும் என்று சொல்லி, நம்பிக்கை நண்பர்களை மீண்டும் பாராட்டி , இன்னொரு இனிமையான பதிவில் உங்களையெல்லாம் சந்திக்கின்றேன் என்று சொல்லி விடைபெறுகின்றேன்!

பாராட்டுங்கள் பாராட்டப்படுவீர்கள்!

1 Comments:

  • At 7:22 PM, Blogger Unknown said…

    இந்த
    mega mall மாதிரி
    இல்லன்னாலும் ஒரு
    பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
    நான்,
    ஒரு முட்டு சந்து ஓரமா
    புதுசா கட விரிச்சிருக்கேன்.

    http://vaarththai.wordpress.com/

    அப்டியே
    அந்தான்ட…இந்தான்ட‌
    போறசொல‌
    நம்ம கடையான்ட வந்து
    எட்டி பாருங்கோ… Senior

     

Post a Comment

<< Home